
அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நீதிமன்றம் வழங்கச் சொல்லி உத்தரவிட்ட பிறகும் இன்னும் வழங்காது ஏன் என்று தே.மு.தி.க நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம் (PF, GRATUITY), மற்றும் எந்தப் பணப்பலன்களும் கிடைக்காமல் தன்குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் தவித்துவருகின்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உனடியாக அவர்களுடைய பணத்தை அவர்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும்.
நீதிமன்றம் கொடுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தும் கொடுக்காதது ஏன்?. மேலும் அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி அரசு பேருந்து வழித்தடத்தில் போக்குவரத்தை இயக்க (GO NO:MS261/29/7/2020) அரசானை போடப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகத்தை படிப்படியாக தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதை உடனடியாக தவிர்ப்பதோடு இந்த அரசானையை ரத்துசெய்து ஏழை, எளிய மக்களும், குக்கிராமத்தில் வசிக்கும் மக்களும், பள்ளி குழந்தைகளும் பயன்படும் வகையில், தற்போது நஷ்டம் என்று தெரிந்தும் பொதுமக்கள் சேவையில் அரசு போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுவருகிறது. தனியார் மயம் ஆக்கப்பட்டால் இலாபம் உள்ள வழித்தடங்கள் மட்டும் பேருந்துகளை இயக்குவார்கள். இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திற்காகவும், தங்கள் உரிமைக்காகவும் அவர்கள் ஓய்வு பெரும் போது, அவர்கள் பணத்தை திரும்பப் பெறவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. மற்ற துறைகள் போன்று பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்திருக்கிறார்.