சிதம்பரம் அருகே திருமண தம்பதியருக்கு பெட்ரோல் பரிசு!!

Petrol gift to wedding couple near Chidambaram

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் 5 லிட்டர் பெட்ரோல் திருமண பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அருகே கீழப்பருத்திக்குடி கிராமத்தை சேர்ந்த இளஞ்செழியனுக்கும் நாகை மாவட்டம் செம்பியவேலன்குடி கிராமத்தை சேர்ந்த கணினி ஆசிரியையை கனிமொழி என்ற பெண்ணிற்கும் ஞாயிறு காலை குமராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

இத்திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வருகை தந்து மணமக்களுக்கு பரிசளித்தனர். இதில் சென்னையை சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து 5 லிட்டர் பெட்ரோலை வாங்கி பெட்ரோல் கேனோடு திருமண தம்பதிக்கு பரிசளித்தனர். திருமண தம்பதிக்கு தீடீரென பிளாஸ்டிக் கேன் பரிசளித்ததை பார்த்த திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் குழம்பிப்போயினர். திருமண தம்பதிகளே ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் தவித்து நின்றனர்.

பின்னர் பெட்ரோல் பரிசளித்த நண்பர்கள், நாளுக்கு நாள் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி வருகிறது. பரிசு பொருள் கொடுக்கறதை விட பெட்ரோல் கொடுத்தால் மணமக்கள் மோட்டார் வண்டிகளில் செல்ல உதவியாக இருக்குமேன்னு தான் புதுமணத் தம்பதியினருக்கு இந்த பரிசு கொடுத்தோம் என கூறினர். இதனால் மணப்பெண் கணிமொழி உட்பட அருகில் இருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

பெட்ரோல் பரிசு குறித்து கேள்விப்பட்ட திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இது குறித்தே பரவலாக பேசினர். இதனை சிலர் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

gifts marriage petrol PRIZE
இதையும் படியுங்கள்
Subscribe