கோவை மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான சித்தாபுதூர் பகுதியில் கோவை பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தமிழகம் வரும் போது இந்த அலுவலகத்திலேயே முக்கியமான ஆலோசனைகளில் ஈடுபடுவர். தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் முக்கியமான முடிவுகளை மாவட்ட அலுவலகத்தில் மட்டுமே எடுப்பார். இந்நிலையில் சற்று முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி சென்றுள்ளனர். பெரிய அளவில் அது வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.