Skip to main content

'இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலை குறையும்' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி    

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

'Petrol and diesel prices will come down if natural gas is used' - Union Minister Nitin Gadkari interview

 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி  சென்னை வந்துள்ளார்.

 

இன்று (16.02.2021) மதியம் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையில் பேசுகையில், ''கழிவு நீரைக்கூட பணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். நாக்பூரில் கழிவுநீரை மின் உற்பத்திக்காக மஹாராஷ்டிரா அரசுக்கு விற்பனை செய்கிறோம். தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளால் மாசு ஏற்படுத்துகிறது'' என்றார். அதன்பின் வேலூர் வாலாஜாபாத் அருகே உள்ள வி.சி.மோட்டூரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

 

பின்பு செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு சாலை உருவாக்கப்படும். அதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமரும், தமிழக முதல்வரும் பங்குகொள்வார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. விவாயிகள் ட்ராக்டருக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கலாம். ஃபாஸ்டேக் வாங்க கொடுக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது'' என திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக, இன்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

தீயாய்ப் பரவிய செய்தி! மாற்றிய ஒன்றிய அமைச்சர்! 

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

The news spread wildly! Union Minister Changed statement

 

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 63ம் ஆண்டு கூட்டம் செப்டம்பர் 12 டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது நிதின் கட்கரி பேசுகையில், “டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று(12-09-2023) மாலை நிதியமைச்சரிடம் கடிதம் கொடுக்க உள்ளேன். மேலும், டீசலுக்கு குட்பை சொல்லுங்கள். தயவு செய்து டீசல் கார்கள் தயாரிப்பை நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால், டீசல் கார்களை விற்பதற்கு சிரமமாகிவிடும் அளவுக்கு வரியை அதிகப்படுத்துவோம்” என பேசினார்.  

 

இவரின் பேச்சு சர்ச்சையாகி விமர்சனங்கள் எழத் தொடங்கியது. இந்த நிலையில், அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில், “டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதனை உடனடியாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசாங்கத்தின் பரிசீலனையில் தற்போது அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை. மேலும், 2070க்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சியை அடைய வேண்டும். இதற்கு ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளுக்கு தகவமைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையான மாற்று எரிபொருட்கள் இறக்குமதியில், எரிபொருட்களானது மாற்றுள்ளதாகவும், செலவில் குறைந்தும் இருக்க வேண்டும். இதனுடன், மாசில்லாததாகவும், சுதந்திரமாக இயங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி, விரைவுச் சாலை போடுவதில் ஊழல் நடந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயத்தை மறுத்து அப்படியான திட்டம் எதுவும் இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.