Skip to main content

அடுத்து பெட்ரோல் லைன்.. வேதனையில் விவசாயிகள்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

எட்டு வழி சாலையாகட்டும், உயர் மின் கோபுரங்கள், கெயில் குழாய் பதிப்பு அடுத்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் அமைக்கும் குழாய்கள் என எல்லாமே விவசாய விளை நிலங்கள் வழியாகவே கொண்டு செல்லும் திட்டத்தை தான் அரசு செயல்படுத்துகிறது. இதனால் விளை நிலங்களை பறிகொடுக்கும் விவசாயிகள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

p

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே விளை நிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதால் அதில் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கிராம குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சாலை ஓரங்களில் மட்டுமே குழாய்கள் அமைக்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவணகொந்தி வரை பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.   இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னிமலை அருகே ஒட்டவலசு என்ற கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பாதிக்கப்படும் விவசாயிகள் அமைப்பை சேர்ந்த ரவி, கி.வே.பொன்னையன், ஜெயபிரகாஷ், தெய்வசிகாமணி, அழகுமலை பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். 

 

 கூட்டத்தில், விவசாயிகள் நிறைவேற்றிய  தீர்மானங்கள் :

*கோவை இருகூரிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக கர்நாடக மாநிலம் தேவணகொந்தி வரை ஐ.டி.பி.எல் என்ற பெயரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய்கள் அமைக்க பணிகள் நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. அகவே  சாலை ஓரங்களில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 
*பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக பொதுமக்களின் ஆதரவை திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டங்களில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்குவார் என்றும் அறிவித்தனர்.

இந்த கூட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான  விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
 person who entered the collector's office pouring petrol caused a commotion

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாமுண்டீஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இருவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தான் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி பலமுறை சதீஷ்குமார், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புகார் மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெட்ரோல் கேனை மறைத்துக் கொண்டு வந்த சதீஷ்குமார் திடீரென்று பொதுமக்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு துப்பாக்கி வடிவில் இருந்த லைட்டரைக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட மனு அளிக்க வந்த பெண்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.