சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியக் குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், சதானந்தன் மற்றும் புவனகிரி ஒன்றியக்குழு உறுப்பினர் காளி. கோவிந்தராசு, மணலூர் கிராமத் தலைவர் சுரேஷ்குமார், மேட்டுக்குப்பம் ஆனந்தன், தொடர்ந்தாலம்மன்மேடு ரவி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மனு ஒன்று அளித்துள்ளனர்.
அதில், “சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட லால்புரம் ஊராட்சிப் பகுதியில் அரசின் மதுபானத்தை, சில நபர்கள் வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதால் அங்கு மது வாங்கி சாலையில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. பொதுமக்களுக்கும் சாலையில் உட்கார்ந்து குடிப்பவர்களுக்கும் இடையே தினம்தோரும் பிரச்சனை வரும் அபாயம் உள்ளது.
மேலும் லால்புரம் ஊராட்சிப் பகுதியில் உள்ள தொடர்ந்தாலம்மன் மேடு பகுதியில் கஞ்சா போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதனை அப்பகுதி இளைஞர்கள் வாங்கிக் குடித்து கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களையும் இளைஞர்களையும் பாதுகாத்திட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளனர்.