ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை கோர பீட்டா விலங்கு ஆர்வலர் அமைப்பு பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை பொதுத்தளங்களில் வெளியிட்டும் வருகிறது.
தமிழர்களின் வீரவிளையாட்டு என அறியப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, மாநிலம் தழுவிய போராட்டத்தால் நீக்கப்பட்டது. அதுதொடர்பான சட்டமசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் 28ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தப் போட்டிகளில் காளை மாடுகள் கொடூரமாக துன்புறத்தப்பட்டதாகக் கூறும் பீட்டா, அதற்கான ஆவணங்களையும் சேகரித்து வைத்துள்ளது.
கூட்டத்தைப் பார்த்து அஞ்சி நிற்கும் காளைகளின் வாலைக் கடிப்பது, கூரான ஆயுதங்களால் தாக்குவது, சாட்டையால் அடிப்பது, மூக்கணாங்கயிறை அறுக்கும்போது மூக்கில் காயம் ஏற்படுவது என பல்வேறு காரணங்களை ஆதாரங்களுடன் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் பீட்டா அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.