ஈரோடு மாவட்டம் கோபி அடுத்துள்ள சிறுவலூர் அருகே ஆயிபாளையம் பிரிவை சேர்ந்தவர் கன்னியப்பன் (57). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கன்னியப்பன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் இன்று காலை கன்னியப்பன் வீட்டு அருகே பொதுமக்கள் பயன்படுத்தாத கிணற்றின் அருகே கன்னியப்பன் செருப்பு இருந்துள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு மூலம் இறங்கி கிணற்றில் தேடினர். அப்போது கிணற்றுக்குள் இருந்து கன்னியப்பன் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கன்னியப்பன் வேப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டு கிடா விருந்துக்கு சென்று உள்ளார். பின்னர் வீட்டுக்கு வரும் வழியில் அதே பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் சுவரின் மேல் அமர்ந்து உள்ளார். அப்போது திடீரென கன்னியப்பன் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும் கன்னியப்பன் கடந்த சில நாட்களாக சரியாக தூங்காமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.