Skip to main content

‘ரஜினிதான் என் வாழ்க்கை’ - மன உளைச்சலால் உயிரிழந்த ரசிகர்..!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

The person who passes away after posting on the Facebook page 'Rajini is my life' ..!

 

விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). கூலித் தொழிலாளியான இவர், தீவிர ரஜினி ரசிகர் என்று கூறுகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்து முதலமைச்சராக போகிறார் என்று தனது நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் அவ்வப்போது சந்தோஷமாக பேசி உற்சாகமாக இருந்துள்ளார் ராஜ்குமார். 
 

இதனிடையே ரஜினி, அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து மிகவும் சோகத்துடன் இருந்த ராஜ்குமார், ‘தலைவர் இப்படி ஏமாற்றிவிட்டாரே’ என்று நண்பர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ராஜ்குமார், கடும் மன உளைச்சலுடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். 

 

இவர், தினசரி முகநூலில் கருத்துக்களைப் பதிவு செய்வது வழக்கமாம். அதன்படி கடந்த 30ஆம் தேதி மாலை தனது முகநூல் பக்கத்தில் ‘ரஜினி தான் என் வாழ்க்கை இதுவே எனது கடைசி பதிவு’ என்று இரண்டு வரிகள் மட்டும் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு இரவு தூங்கச் சென்ற அவர், காலை படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்பிப் பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார். 

 

இந்தத் தகவல் கிடைத்ததும் விழுப்புரம் போலீஸார் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரது உடலை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

 

ராஜ்குமார் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். ரஜினி அரசியலுக்கு வராமல் போன வருத்தத்தினால் ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும் என்கிறார்கள் போலீஸார். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.