Skip to main content

சிங்கப்பூரில் உயிரிழந்த நபர்; கண்ணீரோடு பேசிய நண்பன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

Person who passed away in Singapore; A friend who connects relatives with tears

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் 26 வயது மணிகண்டன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் பிரகாஷ். இவர் மணிகண்டனின் நண்பனும் கூட. இவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு சிங்கப்பூரில் மணிகண்டனை பிரகாஷ் சந்தித்துப் பேசி உள்ளார். 

 

இந்த நிலையில் மணிகண்டன் அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகில் தூக்கு மாட்டி இறந்து விட்டதாகச் சுற்றுலா சென்ற பிரகாஷ் ஃபோன் மூலம் மணிகண்டன் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு மணிகண்டன் உடல் சிங்கப்பூரிலிருந்து அவர்கள் சொந்த கிராமத்திற்கு நேற்று வந்து சேர்ந்தது. 

 

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் மணிகண்டன் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

அப்போது மணிகண்டன் உறவினர்கள், மணிகண்டனின் இறப்பிற்கு காரணம் இங்கிருந்து அங்கு சென்ற மணிகண்டன் நண்பன் பிரகாஷ் தான் என்றும் வெளிநாட்டில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் மணிகண்டன் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பிரகாஷை அழைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்; அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். போலீசார் பிரகாஷை அழைத்து  விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு சாலை மறியலை கைவிட்டு மணிகண்டனின் உறவினர்கள் கலைந்து சென்றனர். பிழைப்பதற்காக சிங்கப்பூருக்குச் சென்ற இளைஞருடன் நண்பனின் மூலம் இறப்பும் உடன் தேடிச் சென்றதோ? என்பது பிரகாஷை விசாரணை செய்த பிறகே தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்  

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Three students lost their lives in an accident near Chinnasalem

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

சாமி சிலைகள் சேதம்; பொதுமக்கள் போராட்டம்       

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

கள்ளக்குறிச்சி  மாவட்டம் சின்னசேலம் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள், கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூசப்பாடி கிராமத்தின் எல்லையில் கன்னிமார் கோயில் உள்ளது. இந்தக் கோவில் சாமிகளை சேலம் மாவட்டம் ஊனத்தூர் மற்றும் அப்பகுதியில் உள்ள பல கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இரு வேறு சமூகத்தினருக்கு கோயிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 10 வருடமாக பூசை நடத்தப்படவில்லை. இதனால் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தனர் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து வழிபாடு நடத்திய மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் எட்டாவது நாளான நேற்று ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். 

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

காரணம் மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் கோவிலை சுற்றியுள்ள மரங்களை வெட்டியதாக கூறுகின்றனர். அப்போது கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் உடைந்தும் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் அருகே அமர்ந்து மரத்தை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன்பின்பு இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிலில் வழிபாடு நடத்தும் மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு‌ இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

 

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதற்கு ஒரு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்று அமர்ந்திருந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புவதாக கூறியதையடுத்து கோவில் முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர். சின்னசேலம் போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். மரங்களை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். கோவில் வளாகத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன் கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது