ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், பாமகவின் ராமதாஸ், அமமுகவின் டி.டி.வி. தினகரன், பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்தஅறிவிப்பில், 'கலைஞரின் மீதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர் பங்காரு அடிகளார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு எனது ஆறுதல்' எனத்தெரிவித்துள்ளார்.