Skip to main content

‘குழந்தைக்கு ரூ. 2 லட்சம்...’ - மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி நிர்வாகி   

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

 person who cheated 2 lakhs by claiming to buy a child was arrested

 

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சாரதா, இந்த தம்பதியினர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு 9 வருடமாக குழந்தை இல்லாததால், குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக முயற்சி எடுத்து வந்த நிலையில், கோவிந்தராஜுக்கு கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகியான பாலகுமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவர் பணத்துக்கு குழந்தை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் பேரம் பேசப்பட்டு ரூ. 2 லட்சம் தருவதாகக் கூறியுள்ளனர்.    

 

இதைத் தொடர்ந்து முன்பணமாக ரூ. 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு கோவிந்தராஜின் தாய் சுசீலா மூலம் சிறுக சிறுக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.   இதனையடுத்து சுமார் ஒரு வருடத்திற்கு மேலாகியும் குழந்தையை பாலகுமார் வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கோவிந்தராஜ், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.     

 

அதனடிப்படையில், போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பாலகுமாரை கைது செய்தனர். மேலும் குழந்தைக்கு பணம் கொடுத்து நீண்ட நாள் ஆனதால் பணம் கொடுத்த கோவிந்தராஜ் மற்றும் பாலகுமார் போனில் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில், “இதெல்லாம் இல்லீகலா பண்ற வேலை, நேக்காகத் தான் பண்ண வேண்டும். கண்டிப்பாக பண்ணிக் கொடுக்கிறேன்” என்று பேசியுள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

 

குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், குழந்தைகள் திருடும் சம்பவங்களும் ஆங்காங்கு நடந்தேறி வரும் நிலையில், குழந்தை கடத்தல் என்பதைத் தொழிலாகச் செய்து வரும் நபர்களின் ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.