Skip to main content

ரத்தக் கரையான ரயில் நிலையம்; திணறடிக்கும் திருவாலங்காடு சம்பவம்!

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

person was arrested for trampling at Thiruvalangadu railway station

 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதிக்கு அருகே உள்ளது திருவாலங்காடு ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் இர்ஃபான். 20 வயதான இவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே, இர்ஃபானுடன் சேர்ந்து அரக்கோணத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக இர்ஃபான் மற்றும் மூர்த்திக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கஞ்சா விற்ற பணத்தில் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இர்ஃபான் தரப்பினருக்கும் மூர்த்தி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால், விரக்தியடைந்த மூர்த்தி, இர்ஃபானை கொலை செய்ய வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளார். 

 

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி காலை 11 மணியளவில் இர்ஃபான் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள், பள்ளிப் படிப்பை முடிக்காத கார்த்திக் மற்றும் விஷால் ஆகிய நான்கு பேருடன் அந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த சமயம், திடீரென இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூர்த்தி மற்றும் அவரது அடியாட்களும் தான் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் இர்ஃபானை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

 

person was arrested for trampling at Thiruvalangadu railway station

 

ஒருகணம், இதில் அதிர்ச்சியடைந்த இர்ஃபான், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்குமாய் ஓட்டம் பிடித்துள்ளார். ஆனாலும் விடாத மூர்த்தி ஆட்கள், இர்ஃபானை துரத்திச் சென்று ரயில்வே அலுவலகத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, அங்கிருந்த அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இர்ஃபானை கொலை செய்ய துரத்தியவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். இத்தகைய சூழலில், அங்கு போலீஸ் வருவதைப் பார்த்து அவர்கள் தப்பிக்கும் போது, அதில் மூர்த்தி என்பவரை போலீசார் பிடித்துள்ளனர். 

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் பயணிகள் கூடும் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.