Skip to main content

செல்ஃபோன் டவர் வைப்பதாகக் கூறி 4.50 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்...

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

 

Person cheated by cell phone tower

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்து உள்ளது வாணியங்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் துளசிதரன், வயது 51. கடந்த மார்ச் 21ஆம் தேதி துளசிதரனை மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்ட ஒருவர் தனது பெயர் பார்த்தசாரதி என்றும் தனியார் மொபைல் கம்பெனி சார்பில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு இடம் தேடி வருவதாகவும் அதற்கான இடம் தங்கள் ஊரில் இருந்தால் கூறுமாறும் கேட்டுள்ளார். 

 

அடுத்த சில தினங்களில் துளசிதரனை நேரில்வந்து சந்தித்த அந்த நபர், தான் சென்னையில் இருந்து வருவதாகவும் மொபைல்ஃபோன் டவர் அமைப்பதற்கான இடம் இருந்தால் காட்டுமாறும் அந்த இடத்திற்கு வாடகையாக மாதாமாதம் பணம் தரப்படும் என்று ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். அதனை நம்பிய துளசிதரன், தனது இடத்தை செல்ஃபோன் டவர் வைப்பதற்கு காண்பித்துள்ளார். அந்த நபர் துளசிதரனிடம், உங்களது இடம் டவர் அமைக்க ஏற்றதாக உள்ளது என்று கூறியதோடு, இந்த இடத்திற்கான பத்திரம், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றைக் வாங்கிச் சென்றுள்ளார். 

 

பிறகு, அந்த இடத்தில் டவர் அமைப்பதற்கு டிராய் என்ற அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு 12,500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் எங்கள் கம்பெனியின் பங்குதாரராக ஆவதற்கு மூன்று லட்ச ரூபாய் பணமும் டெக்னிக்கல் டிபார்ட்மென்ட்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் கட்ட வேண்டும். அதைக் கட்டினால் இந்த இடத்திற்கு மாத வாடகை 7,500 ரூபாய் வழங்கப்படும். நீங்கள் கட்டிய பணத்தில் அப்ரூவல் வாங்குவதற்கு செலுத்தப்பட்ட பணம் மட்டும் திரும்பக் கிடைக்காது. மற்ற தொகை அனைத்தும் சில நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் திரும்பவரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார். 

 

இதனை நம்பிய துளசிதரன், 4 லட்சத்து 62 ஆயிரத்தி 500 ரூபாய் பணத்தை பார்த்தசாரதி என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்கில், தவணை முறையில் செலுத்தி உள்ளார். அதன் பிறகு பார்த்தசாரதி என்ற அந்த நபரை தொடர்பு கொண்டபோது, கரோனா பரவல் காரணமாக டவர் அமைக்கும் பணிகள் தள்ளிப் போவதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் அந்த நபரின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து திருநாவலூர் போலீசில் துளசிதரன் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் விவசாயி துளசிதரனிடம் மோசடி செய்த அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“செல்போனை ஒட்டுக் கேட்பது குற்றவாளிகள் செய்யும் செயல்” - ராகுல்காந்தி எம்.பி.

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்கள் அரசின் ஏற்பாட்டில் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சசி தரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகிய 4 எம்.பி.க்கள் உட்பட 10 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளது.

 

இவர்கள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கும் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “செல்போனை ஒட்டுக் கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள் செய்யும் செயல்” எனத் தெரிவித்தார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிய இளம்பெண் பலி!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Woman incident while talking on cell phone while charging

 

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், தனது 9 வயது மகனுடன் வசித்து வந்தார். கபிஸ்தலத்தில் கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோகிலா இன்று தனது கடையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது.

 

இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில், கோகிலா கத்திக் கூச்சலிட்டுள்ளார். அதே சமயம் கடை முழுவதும் தீ பரவியதால் பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோகிலாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பாபநாசம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.