Person arrested under pocso in namakkal

Advertisment

நாமக்கல் அருகே, 13 வயது பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த எலக்ட்ரீஷியனைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(27). எலக்ட்ரீஷியனான இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல், அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்துவரும் 13 வயது மாணவியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைப்பற்றி வெளியே சொன்னால் குடும்பத்தோடு தீர்த்துக்கட்டிவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். சக்திவேலின் மிரட்டலும் பாலியல் தொந்தரவும்தொடர்ந்து அதிகரித்ததால் இதுகுறித்து அந்த சிறுமி, பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், மகளை இந்நிலைக்கு ஆளாக்கியவரை கைது செய்யக்கோரி பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார், பள்ளிபாளையம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினர் சக்திவேல் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.