Skip to main content

பெண்கள் கொலையில் சிக்கிய வேட்டைக்காரன் 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

Person arrested in ariyalur two woman passed away case

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜெயங்கொண்டம் - மீன்சுருட்டி சாலையில் உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி(35), கண்ணகி(41) எனும் இரு பெண்கள் கடந்த 22ம் தேதி அவர்கள் ஊருக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் களவு போயிருந்தது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் அருகே இருந்த காட்டுப் பகுதியில் மழைக்காளான் பறிக்கச் சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் அப்துல்லா கான் தனிப்படைகள் அமைத்து கொலையாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், விசாரணையில் மோப்பநாயை போலீசார் பயன்படுத்தினர். அந்த மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள பால்ராஜ் என்பவரின் வீட்டின் அருகே சென்றது. 

 

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் காட்டுப்பகுதியில் முயல், காட்டுப்பன்றி, உடும்பு போன்ற வன விலங்குகளை வேட்டையாட அடிக்கடி செல்பவர் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கடந்த சில தினங்களாக பால்ராஜ் அவரது வீட்டில் இல்லை என்பதையும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பால்ராஜ், தனது இரு சக்கர வாகனத்தில் த.பழூர் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் செல்போன் டவர் மூலம் பால்ராஜை மடக்கி பிடித்தனர்.  

 

பிடிப்பட்ட பால்ராஜிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “கொலை நடந்த இடத்திற்கு அருகே எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதனால், அங்கு அவ்வப்பொழுது காட்டு விலங்குகளை வேட்டையாட செல்வேன். சம்பவத்தன்றும் முயல் வேட்டைக்காக அங்கே சென்றேன். அப்போது ஒரு புதரில் முயல் அசைவது போல் தோன்றியது. அதனால் முயல் வேட்டைக்கு பயன்படுத்தும் சுளிக்கி எனும் ஆயுதம் கொண்டு அசைவு தெரிந்த இடத்தில் குத்தினேன். சுளிக்கி என்பது நீண்ட கழியில் கூர்முனை பொருத்தப்பட்டிருக்கும் ஒரு வித ஈட்டி போன்ற ஆயுதம். நான் குத்தியதும் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. 

 

நான் திடுக்கிட்டு அருகே சென்று பார்த்தபோது அந்தப் புதரில் காளான் பிடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தொடையில் சுளிக்கி குத்தப்பட்டிருந்தது. உடனே அந்த பெண்ணிடம் முயல் என்று தவறுதலாகக் குத்திவிட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். அவர் என்னை திட்டியபடியே கையில் இருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் சொல்ல முயன்றார். தகவல் கிடைத்து ஊர்க்காரர்கள் திரண்டு வந்தால் நமக்கு ஆபத்து என்று நினைத்து பயந்து என் கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்து உட்பட சில இடங்களில் குத்தினேன். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அந்தப் புதரிலேயே அவரை போட்டுவிட்டு யாரும் இல்லை, யாருக்கும் தெரியாது என்று எண்ணியபடி திரும்பினேன். அப்போது அவருடன் வந்திருந்த இன்னொரு பெண், இவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு வந்தார். 

 

அவரை உயிரோடு விட்டால் கொலை செய்த விஷயம் வெளியே தெரிந்து விடும் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கட்டையால் அவர் தலையில் ஓங்கி அடித்தேன். அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு சென்று அங்கிருந்து எனது இரு சக்கர வாகனத்தில் த.பழூருக்கு சென்று தலைமறைவானேன். இது நகைக்காக நடந்த கொலை என்று திசை திருப்புவதற்காக அவர் அணிந்திருந்த 6.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றேன்” என்று பால்ராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீசார் பால்ராஜை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களும் கொலையாளியும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்று போலீசார் அந்த இரு கிராமத்திலும் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பால்ராஜ் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து வேட்டை ஆடியதாக ஏற்கனவே அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.