Skip to main content

ரம்ஜானை முன்னிட்டு இரவு 9 மணி வரை துணிக்கடைகள் இயங்க அனுமதி –வேலூர் ஆட்சியர் உத்தரவு

Published on 24/05/2020 | Edited on 25/05/2020

 

Clothes shops


ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு மாதம் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருப்பர். ஒரு மாத நோன்புக்குப் பின் வரும் வளர்பிறையின் மூன்றாவது நாள் வானத்தில் நிலவைப் பார்த்தபின் ரம்ஜானை கொண்டாடுவார்கள்.
 


கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை காலத்தில் தான் ரம்ஜான் நோன்பும் துவங்கியது. நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள், மசூதிக்குச் சென்று தொழுகை நடத்துவார்கள். தடை காலமாக இருந்ததால் இஸ்லாமிய மக்களால் மசூதிக்குச் செல்ல முடியவில்லை. அவரவர் இருக்கும் இடத்திலேயே தொழுகை நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் மே 25ஆம் தேதி ரம்ஜான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களிடம் பெரிய அளவில் பணப்புழக்கம் இல்லாததால் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர், பண்டிகைக்கான புதிய துணிகள் எதுவும் எடுக்கவில்லை.


எடுக்க விரும்பிய சிலருக்கும் துணிக்கடைகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இதுப்பற்றி வேலூர் மாவட்ட வியாபாரிகளுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம். அதாவது, மே 24 மற்றும் 25ஆம் தேதி இரவு என இரண்டு தினங்களுக்கு இரவு 9 மணி வரை துணிக்கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளார். ஏ.சி. வசதியுள்ள துணிக்கடைகள் ஏ.சி.யை இயக்கக்கூடாது என்கிற உத்தரவோடு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 


இந்த அறிவிப்பு வியாபாரிகளை விட இஸ்லாமிய மக்களைப் பெரிதும் மகிழ்ச்சிக்கொள்ள வைத்துள்ளது. வேலூர், குடியாத்தம், பள்ளிக்கொண்டா பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.