Skip to main content

பெரியார் பல்கலைக்கழக 'செருப்படி' சம்பவம்... ப்ரொஃபசருக்கு மீண்டும் பணி! ஒரே குற்றத்திற்கு 2 தண்டனையா?

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

PERIYAR UNIVERSITY PROFESSORS ISSUES SYNDICATE COMMITTEE


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சக பேராசிரியரைக் காலணியால் அடித்ததாக கூறப்பட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பேராசிரியர், மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளார். அதேநேரம், ஒரே குற்றத்திற்காக அவருக்கு இரண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
 


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் அன்பரசன். இதே புலத்தின் துறைத்தலைவராக இருப்பவர் குமாரதாஸ். இருவரில், அன்பரசன்தான் முதலில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அதன்பிறகு ஆறு மாத இடைவெளியில் குமாரதாஸ் பேராசிரியர் ஆனார். முதலில் பேராசிரியர் ஆன தனக்குதான் துறைத்தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் அன்பரசன். ஆனால், பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தரான சுவாமிநாதனோ, யாரும் எதிர்பாராத வகையில் குமாரதாசை இயற்பியல் துறைத்தலைவராக்கினார். 

அன்பரசன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பல்கலைக்கழகத்தில் வேறொரு சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாலுமே அவருக்குத் துறைத்தலைவர் பதவி வழங்கப்படவில்லை என்று அப்போது சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அன்பரசன் ஓரிரு நாள்கள் சில நிமிடங்கள் தாமதமாகப் பணிக்குச் சென்றபோது, வருகைப் பதிவேட்டில் அவருடைய பெயருக்கு நேராக, தாமத வருகை என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார் குமாரதாஸ். இதுகுறித்து அவர்களுக்குள் கருத்து மோதல் இருந்து வந்தது. இந்தக் கருத்து வேறுபாடு, 2018 மார்ச் 2- ஆம் தேதியன்று, அவர்களிடையே கைகலப்பாக மாறியது. இயற்பியல் துறைத்தலைவர் அறைக்குள்ளேயே இருவரும் மோதிக்கொண்டனர். இருவரும் தாங்கள் அணிந்திருந்த காலணியைக் கழற்றி மாறி மாறி தாக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டது.

PERIYAR UNIVERSITY PROFESSORS ISSUES SYNDICATE COMMITTEE

 


இதில் யாருக்குமே வெளிக்காயங்கள் ஏற்படவில்லை. எனினும், குமாரதாஸ் சேலம் அரசு மருத்துவமனையிலும், அன்பரசன் கருப்பூரில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். துறைத்தலைவர் அறையில் இருந்து கையில் காலணியுடன் அன்பரசன் வெளியேறியதைப் பார்த்ததாக சில மாணவர்கள் சாட்சியம் அளித்திருந்ததன் பேரில், அடுத்த சில நாள்களில் பேராசிரியர் அன்பரசனை பணியிடை நீக்கம் செய்தது பல்கலைக்கழக நிர்வாகம். 

பணியிடை நீக்கக் காலத்திலேயே பேராசிரியர் அன்பரசனுக்கு கிடைக்க வேண்டிய மூன்று ஊதிய உயர்வை பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்திருந்தது. இது ஒருபுறம் இருக்க, அன்பரசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மீண்டும் அவருக்கு மூன்று ஊதிய உயர்வுகளை ரத்து செய்திருக்கிறது பல்கலைக்கழகம். இதற்கான தீர்மானத்தையும் சிண்டிகேட் குழுவில் நிறைவேற்றி இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டு, அதற்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அன்பரசன் மீண்டும் புதன்கிழமை (மே 27, 2020) பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவருடைய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. அவர் பணியில் சேர்ந்ததை அடுத்து அறையின் சீல் உடைக்கப்பட்டது. 

PERIYAR UNIVERSITY PROFESSORS ISSUES SYNDICATE COMMITTEE


இது தொடர்பாக பேராசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, ''பெரியார் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை அதிகார மையத்தில் இருப்பவர்களின் சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில்தான் எல்லாமே நடக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் ஒரு நீதி; வேண்டாதவர்கள் என்றால் அவர்கள் மீது சிறு புகார் வந்தாலும் கடும் தண்டனை என்ற ரீதியில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அன்பரசனுக்குதான் இயற்பியல் துறைத்தலைவர் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், குமாரதாசுக்கு அப்பதவியைக் கொடுத்தனர். கேட்டால், நிலைய பதிவுமூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டது என்று சமாளிக்கிறார்கள்.

http://onelink.to/nknapp


குமாரதாசை, பேராசிரியர் அன்பரசன் காலணியால் அடித்தார் என்பதற்கு நேரடி சாட்சியங்கள் இல்லை. ஆனாலும், அவரை பணியிடைநீக்கம் செய்தனர். பணியிடைநீக்கம் என்பது தண்டனை ஆகாது என்று நீதிமன்றமே சொல்லும்போது, அக்காலக்கட்டத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய மூன்று ஊதிய உயர்வுகளை பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது. இப்போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மேலும் 3 ஊதிய உயர்வுகளை நிறுத்தி இருக்கிறார்கள். ஒரே குற்றத்திற்கு இரண்டு தண்டனை எப்படி வழங்க முடியும்? ஊதிய உயர்வு ரத்து குறித்து சிண்டிகேட்டில் தீர்மானமும் நிறைவேற்றிவிட்டு, அவருடைய மீள் பணியமர்வு ஆணையில் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பூசி மெழுகியிருக்கிறார்கள். இதைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம்,'' என்றனர்.

பணி நியமனத்தில் ஊழல், பதவி உயர்வுகளில் விதிமீறல், சாதி பாகுபாடு என குற்றங்களின் கூடாரமாக விளங்கும் பெரியார் பல்கலைக்கழகம், இதுபோன்ற சர்ச்சைகளையும் லேசுபாசாக கடந்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.