Skip to main content

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஓய்வுக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் திடீர் பணியிடைநீக்கம்!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

Salem - Periyar University


சேலம் பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார், ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத்தலைவராகவும், டீன் ஆகவும் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார். கடந்த 2010ஆம் ஆண்டு துணைவேந்தராக தற்காலிகமாக பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு, புதிய துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் கிருஷ்ணகுமார் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையைப் புதுப்பிப்பதற்காக குளிர்சாதன உபகரணங்கள், அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. எழுதுபொருள்கள் கொள்முதல் செய்ததிலும் ரசீதுகளை போலியாக தயார் செய்து, அதிலும் ஊழல் செய்ததாக அவர் மீது மற்றொரு புகாரும் கூறப்பட்டது.


இதுகுறித்த புகாரின்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு செப். 6ஆம் தேதி, கிருஷ்ணகுமார் திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போது துணைவேந்தராக இருந்த முத்துச்செழியன், தனது பணிக்காலம் முடிந்து செல்வதற்கு ஒருநாள் இருக்கையில், கிருஷ்ணகுமாரை பணியிடைநீக்கம் செய்திருந்தார். யாருமே எதிர்பார்த்திராத இந்நடவடிக்கை, அப்போது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தன்னைக் கைது செய்து விடாமல் இருக்க முன் ஜாமினும் பெற்றார். துறையில் நேர்மையானவர் எனப் பெயர் எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சந்திரமவுலி, எப்.ஐ.ஆர். பதிவு செய்து, 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிருஷ்ணகுமார் மீதான வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஏனோ காலம் கடத்தி வந்தார். இதற்கிடையே அவரும் எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்றது வேறு கதை.


இந்நிலையில், பேராசிரியர் கிருஷ்ணகுமார் நடப்பு 2020 ஜூலை 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். தன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் இந்த வழக்கு நீர்த்துப்போய் விட்டதாகக் கருதிய அவர், தனது அனைத்து விதமான அரசியல் தொடர்புகள் மூலமும் ஓசையின்றி ஓய்வு பெறுவதற்கான பணிகளைச் செய்து வந்தார். பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகார மையங்களும் அவரை கவுரவமாக வழியனுப்பி வைப்பதற்கான வேலைகளைச் செய்து வந்தன.


நிலைமை இவ்வாறு இருக்க, அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் முழுமையாக எட்டு நாள்கள் இருந்த நிலையில், அவர் திடீரென்று வியாழக்கிழமை (ஜூலை 23) பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். துணைவேந்தர் குழந்தைவேலு அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகுமாருக்கு ஜூனியர்கள், சமகாலத்தவர்கள் பலர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பல்கலைகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தகவல் பரவியதால் அவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரிடம் பேசுகையில், ''கடந்த 2013இல் என்னை பணியிடைநீக்கம் செய்ததே உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அப்போதைய துணைவேந்தர் முத்துச்செழியன் மீண்டும் துணைவேந்தராக வர முயற்சித்தார். அதற்கு நான் இடையூறாக இருந்தேன் என்று கருதி, அதற்குப் பழிதீர்க்கும் நோக்கத்துடன் என்னைப் பணியிடைநீக்கம் செய்தார். அதற்கு அடுத்த சில நாள்களில் என் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது. முகாந்திரமற்ற ஒரு புகாரால் இப்போது நான் ஓய்வு பெறும் நிலையிலும் மன உளைச்சலை கொடுக்கிறார்கள்,'' என்றார்.


''பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான கிருஷ்ணகுமார் தீவிர இடதுசாரி சிந்தனையாளர். தனது துறையில் மட்டுமின்றி, பல்கலை நிர்வாகப்பணிகளிலும் திறமையானவராக இருந்தார். அதனால்தான் அவர் டீன் ஆகவும் நியமிக்கப்பட்டார். எந்தத் துணைவேந்தர் வந்தாலும் அவருடைய திறமையைப் பயன்படுத்திக் கொள்ள தயங்கியதில்லை. தமிழ்த்துறையில் உள்ள ஒரு பேராசிரியர், அவருக்கு எதிரான சங்கத்தைச் சேர்ந்தவர். 

 

http://onelink.to/nknapp


ஆசிரியர் சங்க தேர்தலின் போதிருந்தே தமிழ்த்துறையில் உள்ள குறிப்பிட்ட அந்த பேராசிரியர், கிருஷ்ணகுமார் மீது மோதல் போக்கைத் தொடர்ந்து வருகிறார். அவரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சிலரும் கிருஷ்ணகுமாரை எப்படியாவது ஓய்வு பெறுவதற்குள் பணியிடைநீக்கம் செய்ய வைத்துவிட வேண்டும் என முதல்வர், உயர்கல்வித்துறை செயலர், ஆளுநர் வரை பெட்டிஷன்களை தட்டி விட்டதாகவும்,'' சொல்கிறார்கள் பேராசிரியர்கள் சிலர்.


இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலிடம் கேட்டபோது, ''பேராசிரியர் கிருஷ்ணகுமார் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவில் மோசடி புகார் உள்ளிட்ட சில புகார்களின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளது. இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளபோது ஓய்வு பெற முடியாது. மேலும், கடைசி நாள் அல்லது அதற்கு முதல் நாளன்று பணியிடைநீக்கம் செய்வது என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். அவருடைய பிறந்த நாள் ஜூலை 27ஆம் தேதி வருகிறது. அதன் அடிப்படையில், அதுவரை காத்திருக்காமல் சில நாள்கள் முன்னதாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்த பிறகே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய அழுத்தமும் இல்லை,'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.