Skip to main content

சேலம் பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் தில்லுமுல்லு! தணிக்கை அறிக்கையில் அம்பலம்

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 


யுஜிசி விதிகளை புறந்தள்ளி பேராசிரியர்கள் நியமனம், ஊழியர்களுக்கு கணக்குவழக்கில்லாமல் சம்பளத்தை வாரி இறைத்தது என ஒட்டுமொத்த நிர்வாகக் குளறுபடிகளால் திணறி வரும் சேலம் பெரியார் பல்கலையில், இதுவரை 28 கோடி ரூபாய்க்கு கணக்கு ஆவணங்களை ஒப்படைக்காமல், பல ஆண்டுகளாக போக்குக் காட்டி வருவது உள்ளாட்சித் தணிக்கையில் அம்பலமாகி உள்ளது. 

 

p


சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்துடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி நிர்வாகங்களின் கீழ் இயங்கி வரும் 101 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. எடப்பாடி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர் ஆகிய ஐந்து உறுப்புக்கல்லூரிகளும் இதன்கீழ் நேரடியாக இயங்கி வந்த நிலையில், மேட்டூர் உறுப்புக்கல்லூரி மட்டும் அரசுக்கல்லூரியாக மாற்றப்பட்டு உள்ளது. கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இப்பல்கலை, தொடர்ந்து நிர்வாக சீர்கேடுகளால் திணறி வருகிறது. 

 

s


ஆரம்பத்தில் இருந்தே பல்கலை நிர்வாகத்தில் அரசியல் தலையீடு, பேராசிரியர் பணியிடங்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வசூலித்தது, தேர்வு நடத்துவதில் குளறுபடி, தேர்வு நடத்தினாலும் சான்றிதழ்கள் வழங்குவதில் இழுத்தடிப்பு என அனைத்து மட்டங்களிலும் ஊழல் புரையோடிக் கிடக்கும் பெரியார் பல்கலையில் சத்தமே இல்லாமல் 28 கோடி ரூபாயை லபக்கி இருப்பதும் தணிக்கை மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

 


கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த செனட் கூட்டத்தில், பெரியார் பல்கலையின் 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கைத்துறை மண்டல இணை இயக்குநர் வெங்கடாச்சலம் மேற்பார்வையில், ஆய்வாளர் ராஜசேகர் தணிக்கை செய்துள்ளார். தணிக்கைக்கு உட்படுத்திய ஆண்டில் மட்டும் மொத்தம் 33.38 லட்சத்திற்கான கணக்கு ஆவணங்கள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


பல்கலை தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து 2016-17ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக 28.14 கோடி ரூபாய்க்கான கணக்கு ஆவணங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 2012-13ம் ஆண்டில் மட்டும் 6.56 கோடியும், 2009-10ம் ஆண்டில் 8.87 கோடி ரூபாயும் செலவழித்தற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் கூறுயுள்ளனர் தணிக்கையாளர்கள்.


தணிக்கையாளர்கள் அத்துடன் விடவில்லை. கல்லூரி முதல்வர்கள், உதவி பேராசிரியர் நியமனங்களில் சகட்டுமேனிக்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதையும் புட்டு புட்டு வைத்துள்ளனர். எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், பென்னாகரம் உறுப்புக்கல்லூரி முதல்வர் செல்வவிநாயகம், அரூர் உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி உறுப்புக்கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் ஆகிய நான்கு பேரும் யுஜிசி விதிகளுக்கு முரணாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

 

p


அதேபோல், பல்கலையில் பணியாற்றி வரும் உதவி / இணை பேராசிரியர்கள் சுகுணா, பச்சமுத்து, பரமேஸ்வரி, இளங்கோவன், தங்கப்பன், லதா, பிரதிபா, தீபா, அறிவுச்சுடர் ஆகியோரின் கல்விச்சான்றிதழ்கள் போலியானவையாக இருக்கலாம் என்ற அய்யத்தையும் எழுப்பியுள்ள தணிக்கையாளர்கள், முந்தைய தணிக்கையின்போது இவர்களின் மூலச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை தாக்கல் செய்யக்கேட்டும், வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது பல்கலை நிர்வாகம். இவர்கள் மட்டுமின்றி உறுப்புக்கல்லூரி முதல்வர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் தணிக்கையாளர்கள்.


மேட்டூர் அரசுக்கல்லூரியின் முதல்வராக உள்ள மருதமுத்துவின் பணி நியமனத்திலும் யுஜிசி விதிகள் பின்பற்றப்படவில்லை என 2015-16, 2016-17 ஆகிய இரு தணிக்கை அறிக்கையிலும் சொல்லப்பட்டு உள்ளது. இதுவரை அவருடைய பணி நியமன விவகாரத்தில் உள்ள ஆட்சேபனைகள் ஏனோ இதுவரை களையப்படவில்லை. எல்லாவற்றுக்கும், 'வைட்டமின்-ப' மட்டுமே ஒரே காரணம். 


இவர்கள் கதை இப்படி என்றால், மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் சூர்யகுமார், போதிய கல்வித்தகுதி இல்லாமலேயே நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக, தணிக்கை அலுவலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். பி.ஹெச்டி. ஆராய்ச்சிப் படிப்பை நிறைவு செய்ய குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஆனால் சூர்யகுமார் 23 மாதங்களில் முனைவர் பட்டத்தை 'வாங்கி' வந்து சமர்ப்பித்து, பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 20.8.2015ம் தேதி உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்த சூர்யகுமாருக்கு தணிக்கை ஆண்டு வரையிலும் மட்டும் 11.61 லட்சம் ரூபாய் வெட்டிச் சம்பளத்தை அழுதிருக்கிறது பெரியார் பல்கலை. 


உரிய கல்வித்தகுதி, போதி முன்னனுபவம், தனித்திறன்களுடன் வெளியே பெருங்கூட்டமே வேலையின்றி திண்டாடிக் கொண்டிருக்கும்போது, பெரியார் பல்கலையோ பணத்தைப் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத ஆள்கள் எல்லாம் ஆசிரியர்களாக நியமித்திருக்கிறது.


இது ஒருபுறம் இருக்க, உதவியாளர், கண்காணிப்பாளர், ஸ்டெனோகிராபர், எழுத்தர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பியதிலும் எக்கச்சக்கமாக கோல்மால்கள் நடந்துள்ளதை கண்டுபிடித்திருக்கிறது தணிக்கைத்துறை. உயர்கல்வித்துறையின் அனுமதி இல்லாமலேயே, 107 பணியிடங்களுக்கு ஆள்களை நிரப்பி உள்ளது பல்கலை நிர்வாகம்.  


பல்கலை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, முன்பு துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், முறைகேடாக 136 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பினார். உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரையிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும் வசூலித்துக்கொண்டு, பணி நியமனம் செய்தார். அவருடைய காலக்கட்டத்தில்தான் பலர் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தனர் என்கிறார்கள்.


கடந்த 2015-2016 தணிக்கை அறிக்கையில் 47.44 கோடி ரூபாய்க்கு உரிய கணக்கு ஆவணங்கள் இல்லை என்று ஆட்சேபனைகளை பதிவு செய்திருந்த தணிக்கைத்துறை, 2016-2017 தணிக்கை அறிக்கையில் தடாலடியாக 28.14 கோடிக்கு மட்டுமே கணக்கு ஆவணங்கள் இல்லை என சுட்டிக்காட்டி இருப்பதும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 


பொதுவாக, தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒவ்வோர் ஆட்சேபனைக்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகமும், தணிக்கையாளர்களும் கொண்ட கூட்டமர்வில், கூடுமானவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஆட்சேபனைகள் சரிக்கப்பட்டப்படும். ஆனால், ஒரே ஆண்டில் 19.29 கோடி ரூபாயை எப்படி சரிக்கட்டியிருக்க முடியும்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.


இதுகுறித்து நாம் உள்ளாட்சித் தணிக்கைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். பெயரைக் குறிப்பிடாமல் இருந்தால் பேசுகிறேன் என்றவர், விரிவாக பேசினார்.


''கடந்த 2015&2016 தணிக்கை அறிக்கையின்போதே பெரியார் பல்கலையில் 47 கோடி ரூபாய்க்கு கணக்கு ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படாதது குறித்து சுட்டிக்காட்டி இருந்தோம். அது சட்டமன்ற வரைவுக்குழு வரையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகுதான், ஒட்டுமொத்தமாக நிலுவையில் உள்ள தொகையை தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கத் தேவையில்லை என்றும், அந்தந்த ஆண்டில் மட்டும் உள்ள ஆட்சேபனைகளை மட்டும் தெரிவித்தால்போதும் என்றும் வாய்மொழியாக ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதனால் பல காலங்களாக நிலுவையில் உள்ள ஆட்சேபனைகளை நாங்கள் இந்தமுறை அறிக்கை புத்தகத்தில் வெளிப்படையாக பதிவு செய்யவில்லை. 


சில இனங்களுக்கு முன்கூட்டியே செலவு செய்திருப்பார்கள். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் போயிருக்கும். அதுபோன்ற சிக்கலான இனங்களில் ந £ங்கள் இந்தமுறை அறிக்கை புத்தகத்தில் வெறும் கோடு மட்டும் போட்டுக் காட்டியிருக்கிறோம். முறைகேடான பணி நியமனங்கள் வாயிலாக ஊழல் நடந்திருப்பது  உண்மைதான். ஆனால் அதை நாங்கள், Ôஊழல்Õ என்ற வார்த்தையில் எங்கேயும் குறிப்பிட முடியாது. அதனால்தான் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்ட  ஆட்சேபனை தொகைக்கு உரிய ஆவணங்களை இன்று வரை பல்கலையால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதேநேரம், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத  பணியிடங்களை முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறோம். 


பணி நியமனங்களில் யுஜிசி விதிகள் மீறப்பட்டுள்ளன என்று நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தால், அது பல்கலை விதிகளுக்கு உட்பட்டு நிரப்பப்பட்டது என்பார்கள். பல்கலை விதிகள் மீறப்பட்டுள்ளது என்றால் சிண்டிகேட் குழுவில் ஒப்புதல் பெற்றாகி விட்டது என்பார்கள். சார்... பிரிட்டிஷ் காலத்தில் வகுத்த விதிகள்தான் பல்கலைகளில் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அதனால்தான் அங்கு பல முறைகேடுகள் நடப்பது கண்கூடாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை,'' என்று புலம்பினார் தணிக்கை அதிகாரி.


தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து நாம் பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டோம்.


''2016-2017 தணிக்கை அறிக்கையில் மொத்தம் 569 பாராக்களில் தணிக்கை தடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 150 பாராக்களுக்கு உரிய கணக்கு ஆவணங்கள் இப்போது தயார் நிலையில் இருக்கின்றன. கடந்த காலங்களில் உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தணிக்கையில் சொல்லப்பட்டு உள்ளன. முந்தைய காலங்களில் நடந்த தவறுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதற்காக அதை தட்டிக்கழிப்பதாக அர்த்தம் இல்லை. 


அதேபோல் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதிலும் விதிகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். துறை ரீதியான அக்கவுண்டன்சி தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றாலே போதும் என்று சிலரும், இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். அதுபற்றி ஏதேனும் அரசாணை இருந்தால் அனுப்பும்படி உயர்கல்வித்துறை துணை செயலரிடமும் கேட்டுள்ளேன். அந்த அரசாணை கிடைத்தால், பதவி உயர்வு தொடர்பான ஆட்சேபனைகளில் விரைந்து தீர்வு காண முடியும்,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார், துணைவேந்தர் குழந்தைவேலு.


பெரியார் பல்கலையில் அரங்கேறியுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் பலமுறை நாம் செய்தி வெளியிட்டும், எருமை மாட்டின் மீது மழை பெய்த கணக்காக அசைந்து கொடுக்காமல் இருக்கிறது, பல்கலை நிர்வாகம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் சொந்த மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பல்கலையின் நிர்வாகத்தைக்கூட சீரமைக்காமல் வெறுமனே கடந்து போவதுதான் அவரின் ஆளுமைத்திறனை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. 


பெரியார் பல்கலையின் இலச்சினையில் 'அறிவால் விளையும் உலகு' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பல்கலை நிர்வாகமோ 'அநியாயங்களே நியாயங்கள் ஆகும்' எனச் சொல்லாமல் சொல்கிறது. 

சார்ந்த செய்திகள்