ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தம்பி மகன் உயிரிழந்ததன் துக்கம் தாளாமல் பெரியப்பா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபியை அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மூத்த சகோதரர் மோகன் குமார். பெயிண்டிங் தொழிலாளி. கங்காதரனின் மகன் நவீன் கடந்த 4ம் தேதி ஒரு விபத்தில் உயிரிழந்தார். அவரது 16ம் நாள் காரியம் 20ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அங்கு வந்த மோகன்குமார் மிகுந்த துக்கத்துடன் காணப்பட்டார்.
இந்நிலையில், வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற மோகன்குமார் கோபி, குப்பைமேடு டாஸ்மாக் கடை அருகில் நேற்று மதியம் வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார். அப்பகுதியினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மோகன் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் பெரியப்பாவான மோகன்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.