Skip to main content

பேரறிவாளனுக்கு பெண் பார்க்க தொடங்கி விட்டோம்! அற்புதம்மாள் நெகிழ்ச்சி!!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Perarivalan and aruputha ammal met udhayanithi stalin

 

பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கும் வேலைகளை தொடங்கி விட்டதாக அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறினார்.


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் மே 18ம் தேதி விடுதலை செய்தது. அரசியலமைப்புச் சட்டம் 142வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதையடுத்து அவர், தனது விடுதலைக்காக சட்டப் போராட்டம் நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ மற்றும் ஆதரவாக இருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். 


இந்த நிலையில், ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் தங்கியுள்ள நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினையும், பேரறிவாளன் வெள்ளிக்கிழமை (மே 20) சந்தித்து நன்றி கூறினார். திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜூக்கும் நன்றி தெரிவித்தார். அவருடைய தாயார் அற்புதம்மாளும் அவர்களுக்கு நன்றி கூறினார். 


இதையடுத்து அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியது; "பேரறிவாளனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினையும், பட இயக்குநர் மாரி செல்வராஜையும் சந்தித்து நன்றி கூறினோம். சாமானியர்களின் குரல் எடுபடாது என்பது போல, என் மகன் குற்றவாளி இல்லை என்று சட்டரீதியாக போராடியும் எடுபடவில்லை. 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகன் 31 ஆண்டுகள் கழித்து சுதந்திர மனிதனாக வெளியே வந்திருக்கிறார். 


உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சிறையில் வாடும் பலருக்கு பயனளிக்கும். இனி, பேரறிவாளனுக்கு குடும்பம் அமைத்து தர வேண்டும் என்ற ஏக்கம் உள்ளது. அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காக பெண் தேட தொடங்கி விட்டோம்.” இவ்வாறு அற்புதம்மாள் கூறினார். 


பேரறிவாளன் கூறுகையில், ''இது எனக்கு புது உலகமாக இருக்கிறது. சிறையில் எனக்கு எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லை. அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். சிறையில், நான் மற்ற சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன். சாமானியன் ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் எத்தனை துன்பங்களையும், வலிகளையும் சந்திக்க வேண்டும் என்பதை இந்த தண்டனை மூலம் உணர்ந்து கொண்டேன். ஒரு மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவே இறுதியானது. அந்த முடிவு, ஆளுநரை கட்டுப்படுத்தும் என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆணித்தரமாக கூறியுள்ளது. இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமத்தை குறை கூற முடியுமா?’ - நீதிபதி அனிதா சுமந்த்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
chennai hc Justice Anita Sumanth questions Can we blame Varnashrama for caste atrocities

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.  

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். மேலும் சனாதனம் குறித்து திமுக எம்.பி ஆ. ராசாவும் பேசி வருகிறார். இவர்கள் எதன் அடிப்படியில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது; இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி  நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது; அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்தார். 

Next Story

அரசுப் பேருந்துகளில் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Minister Udayanidhi started a new facility in government buses

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக மின்னணு பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

இந்த திட்டத்தினால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டிற்காக, பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் இதன் மூலம் பயணிகளிடம் ரொக்கப் பணம், ஏடிஎம் அட்டை, கடன் அட்டை மற்றும் யூபிஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  இணை மேலாண் இயக்குநர் .க.குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், அரசு உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.