Skip to main content

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை - இருவர் கைது

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Perambur Jewelery Shop Robbery - Two Arrested

 

பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் நகைக்கடை அதிபர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். முதல் தளத்தில் ஜே.எல் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையைப் பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துச் சென்றனர். அடுத்தநாள் காலை சுமார் 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத்  திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளே சென்று பார்த்தபோது, கடையினுள் இருந்த லாக்கர் ரூம் கதவை வெல்டிங் மிஷினால் கட் செய்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. 

 

மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே ஸ்ரீதர் திரு.வி.க. நகர் காவல்நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் நான்கு ஏடிஎம்களில் தொடர்ச்சியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கும் பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அண்மையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இருப்பினும், பெரம்பூரில் நிகழ்ந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக எந்த ஒரு துப்பும் கிடைக்காது இருந்தது. இந்நிலையில், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக தற்போது பெங்களூரில் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.