Skip to main content

மகன் கொலை... நாடகமாடிய பெற்றோர்...

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

police station


பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன். 29 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாட்டில் இருக்கும்போது சம்பாதித்த பணத்தைத் தன் தந்தை ராமசாமியிடம் கொடுக்கவில்லை என்று தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
 


முத்தையன் தன் தாய் சரஸ்வதியுடன் பக்கத்துவீட்டில் குடியிருந்து வந்தார். அவரது தந்தை ராமசாமி சொந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு பையனுக்கும் அவரது தாய் சரஸ்வதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இவர் சண்டை போடும்போது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு முத்தையன் தந்தை ராமசாமி அங்கு வந்துள்ளார். ஏன் சரஸ்வதியிடம் தகராறு செய்கிறாய் என்று மகன் முத்தையனை தட்டிக் கேட்டுள்ளார். இதில் அப்பா மகன் இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். 
 

கணவர் ராமசாமியை மகன் முத்தையன் தாக்கியதைக் கண்டு கோபம் கொண்ட சரஸ்வதி, கணவருடன் சேர்ந்து கொண்டு முத்தையனை தாக்கியுள்ளனர். கணவன் மனைவி இருவரும் தாக்கியதில் கீழே விழுந்த முத்தையன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையறிந்த ராமசாமி, சரஸ்வதி இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்தனர். யாருக்கும் தெரியாமல் முத்தையன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் உறவினர்களிடம் கூறிவிடுவது என முடிவு செய்து இறந்த முத்தையன் சடலத்தைத் தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.
 


இதுகுறித்து கணவன் மனைவி இருவரும் திட்டமிட்டபடி உறவினர்களிடம் முத்தையன் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் சொல்லியுள்ளனர். உறவினர்களும் முத்தையன் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று நம்பி அவரது  உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தனர். ஊரிலுள்ள சிலர் விகளத்தூர் போலீசாருக்கு முத்தையன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தகவல் அளித்துள்ளனர்.
 

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து முத்தையன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமசாமி சரஸ்வதி இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மகனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தாய் தந்தை இருவரும் சேர்ந்து மகனை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ள இந்தச் சம்பவம் பாண்டகப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.