Skip to main content

முதியவரிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

perambalur kalathur vao and village assistant bribe issue due to patta name transfer 

 

பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சின்னதுரை (வயது 70). இவரது வீடு நத்தம் கூட்டுப்பட்டாவில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் அந்த வீட்டை தனது மகன் லோகநாதன் பெயரில் மாற்றம் செய்து கொடுத்து அந்த இடத்தையும் வீட்டையும் உட்பிரிவு செய்து தனி பட்டாவாக தனது மகன் லோகநாதன் பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி முறைப்படி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது மனு களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் (வயது 33) சென்றது. அவர் சின்னதுரை மனுவை சர்வே துறைக்கு பரிந்துரை செய்து அளவீடு செய்து தனி பட்டாவாக மாற்றம் செய்வதற்கு காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

இதை அறிந்த சின்னதுரை கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் மனு அனுப்பினால் உடனே நாங்கள் பட்டா மாற்றம் செய்து கொடுத்து விடுவோமா என்ன. பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் லஞ்சமாக 20,000 ரூபாய் பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கறாராக பேரம் பேசியுள்ளார்.

 

இதையடுத்து சின்னதுரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகார் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின் படி 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனை சென்று சந்தித்து அவரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார் சின்னதுரை. கிராம நிர்வாக அலுவலருடன் கிராம உதவியாளர் ஈஸ்வரியும் (வயது 30) இதற்கு உடந்தையாக இருந்து லஞ்சப் பணத்தை பெற்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் கிராம உதவியாளர் ஈஸ்வரி இருவரும் எண்ணிப் பார்க்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து துறையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வீட்டிலும் நத்தக்காடு கிராமத்தில் உள்ள கிராம உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ‘தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்து தர முறையாக மனு கொடுக்கும் பொதுமக்களுக்கு பட்டா மாற்றம் செய்து தராமல், லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்றம் செய்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை கூட மதிப்பது இல்லை’ என்று ஒரு வழக்கு விசாரணையின் போது வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தான் பட்டா மாற்றம் செய்ய பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன், கிராம உதவியாளர் ஈஸ்வரி ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.