People's Movement for Cleanliness Consultative Meeting chaired by the Collector!

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.

முதலமைச்சர், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய சுற்றுலாத் தலங்கள் பிரசித்தி பெற்ற கோவில்கள், சந்தைகள், உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஆட்சியர், “ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணி முகாம்கள் மேற்கொள்ளப்படும். மேலும் குப்பையில்லா நகரங்களை உருவாக்கும் வகையிலும், “எனது குப்பை எனது பொறுப்பு” என்பதை அனைவரும் பின்பற்றிடும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில், பொதுமக்கள் பெரிதும் பங்கேற்று நகரங்களைத் தூய்மையாக வைத்திட தங்களது பங்களிப்பினைச் செலுத்திட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடையே அலுவலர்கள் ஏற்படுத்திட வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.