Skip to main content

மாஸ்க் அணியாமல் அலட்சியம்: 24 நாட்களில் 20 லட்சம் அபராதம் வசூல்!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

 

peoples mask wear salem corporation

 

 

சேலத்தில், பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் கரோனா பரப்பும் வகையில் அலட்சியமாக செயல்பட்ட நபர்களிடம் இருந்து 24 நாள்களில் 19.94 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

கரோனா வைரஸ் தொற்று கிராமப்புறங்களை காட்டிலும், மக்கள் அடர்த்தி மிகுந்த மாநகர பகுதிகளில் வேகமாக பரவுகிறது. நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள பொது வெளிகளில் செல்லும்போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

எனினும், பலர் பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் செல்வதும், மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக செயல்படுவதும் தொடர்ந்தது. இதையடுத்து, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அரசு உத்தரவிட்டது.

 

இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது வெளிகளிலும், நிறுவனங்களிலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்த நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

அதன்படி, கடந்த செப். 14- ஆம் தேதி முதல் அக். 7- ஆம் தேதி வரையிலான 24 நாள்களில் மட்டும் 19 லட்சத்து 94 ஆயிரத்து 880 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,725 பேரிடம் இருந்து இந்த அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

 

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொது வெளிகளில் செல்லும்போதும், பணியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது கடந்த ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கரோனா நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், விதிகளை மீறி செயல்பட்டால் 500 ரூபாயும், பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி செயல்படுவோருக்கு 500 ரூபாயும், கடைகள், வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டிகளுக்கு 5,000 ரூபாயும் அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சேலம் மாநகர பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் தீவிர தொற்று நோய்த்தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமனம்!      

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Balachandar IAS appointed as the new Commissioner of Salem Corporation

 

சேலம் மாநகராட்சி புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியாக இருந்த சேலம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை, துணை ஆணையர் அசோக்குமார் கூடுதலாகக் கவனித்து வந்தார்.     

 

இந்நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த கூடுதல் ஆட்சியர் பாலசந்தர் ஐஏஎஸ், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர், சேலம் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

சாக்கடை சுத்தப்படுத்தும் பணியில் தனிநபரை ஈடுபடுத்தினால் கிரிமினல் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்    

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

 Corporation warning criminal action will be taken individual involved sewer work
கோப்புக்காட்சி

 

சாக்கடைக் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனி நபர்களை ஈடுபடுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என சேலம்  மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.

 

சேலத்தில் சாக்கடைக் கால்வாயை ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களின்றி,  சுத்தம் செய்யும் காணொலி காட்சி, மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ப்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் விசாரணை நடத்தினார். காணொலி காட்சியில் உள்ள நபர் மாநகராட்சி பணியாளர் அல்லாத தனி நபர் என்பது தெரிய வந்தது. அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையின் பேரில், அந்த நபர்  சாக்கடை கால்வாயில் இறங்கி சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.     

 

இதையடுத்து, சேலம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் மாநகராட்சி அனுமதியின்றி, தனிநபர்களை வைத்து சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். கழிவுநீர்க் கால்வாய்களில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டு சுத்தம் செய்ய வேண்டியிருப்பின், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோட்டத்தின்  சுகாதார மேற்பார்வையாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.  

 

மாநகராட்சி அனுமதியின்றி தனிநபர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுத்துவோர் மீது குற்றவழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகராட்சியில் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடப்  பொருள்கள் போதிய அளவில் வழங்கப்பட்டு உள்ளன. தூய்மைப் பணியில் ஈடுபடும்போது பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபரை அனுமதிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.