தமிழக ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை ரூபாய் 1,000 மற்றும் இலவச பொருட்கள் விநியோகம் தொடங்கியது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால், அரிசி அட்டைகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. பெரும்பாலான ரேஷன் கடைகளில் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் விட்டு வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால், சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் மக்கள் சமூக இடைவெளியையும், கரோனா பரவும் அச்சத்தையும் மறந்து 1000 ரூபாய் பணம் மற்றும் இலவசப் பொருட்கள் வாங்க நெருக்கமாக வரிசையில் நிற்பதோடு இடைவெளி விட்டு நிற்க சொல்லும் காவல் துறை அதிகாரிகளிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.