Skip to main content

"மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

"People use us" - Chief Minister MK Stalin's speech!

 

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (03/10/2021) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வாக்களிக்கத் தயாராக இருக்கும் மக்கள் அனைவருக்கும் வணக்கம். சட்டமன்றத் தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த நீங்கள், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் உங்களது பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்று நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 'உத்தரவிடுங்கள் உங்களுக்கு உழைக்கக் காத்திருக்கிறோம்' என்று நாட்டு மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்டோம். இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள் என்று எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, நீங்களும் உங்களது வாக்குகளை வழங்கினீர்கள். 

 

உங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட நான் மே 7- ஆம் தேதி அன்று பொறுப்பேற்றுக் கொண்டேன். பொறுப்பேற்றது முதல் இன்று வரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். தேர்தலுக்கு முன்னால் என்னென்ன வாக்குறுதிகளைத் தந்தேனோ, அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் எல்லோருக்கும் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை செய்திருக்கிறோம். 

 

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். 14 வகையான மளிகைப் பொருட்களைக் கொடுத்திருக்கிறோம். ஆவின் பால் விலையை மூன்று ரூபாய் குறைத்திருக்கிறோம். பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனியாக நிதிநிலை அறிக்கையை வெளியிட்டோம். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், ரத்து செய்திருக்கிறோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்ட ஐந்து சவரனுக்கு உட்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

 

ஊரகப் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டு வந்திருக்கிறோம். கிராம பகுதிகளை மேம்படுத்த 'நமக்கு நாமே' திட்டத்தைப் புதுப்பிக்கவிருக்கிறோம். 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தை மீண்டும் தொடங்கி விட்டோம். 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற மகத்தான திட்டம் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள். பொங்கலுக்குள்ளாக ஒரு கோடி பேருக்கு சிகிச்சைக் கொடுத்திருப்போம். 

 

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்க உத்தரவுப் போட்டிருக்கிறோம். மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக இணைப்பு தரப் போறோம். மற்றவர்களுக்கு விரைவிலேயே வழங்குவோம். மகளிர் அரசு ஊழியருக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிக்க தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் வந்தபோது, என் கிட்ட நீங்கள் கொடுத்த மனுக்களில் பெரும்பான்மையான மனுக்களுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது. இவை அனைத்தும் செய்துக் கொடுத்திருக்கிறோம் என்பதை தலைநிமிர்ந்து சொல்ல நான் விரும்புகிறேன். 

 

அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் செய்துக் கொடுத்திருக்கிறோம் என்பது தான், தி.மு.க.வின் தனித்தன்மை ஆகும். 10 ஆண்டு காலம் ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அவர்கள் இரண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் கொடுத்த வாக்குறுதிகள் 505- ல் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு, இந்தியாவிலேயே தி.மு.க. அரசாக மட்டும்தான் இருக்க முடியும். 

 

இத்தகைய விவேகமும், பொறுப்புணர்வும், அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது நான் வரிசைப்படுத்தியதைப் போல ஏராளமான திட்டங்களை வரிசையாகக் கொண்டு வர விருக்கிறோம். அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியம் ஆகும். எவ்வளவு பெரிய திட்டங்களை நாங்கள் தீட்டினாலும், அது பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் மக்களை வந்து சேரும். தடங்களோ, தடையோ இல்லாமல், எல்லாம் திட்டங்களையும் மக்களைப் போய் சேருவதற்கு வழிவகை ஏற்படுத்தித் தருவதாக உங்களுடைய வாக்குகள் அமையும். உள்ளாட்சியிலும், நல்லாட்சி அமைவதற்கான வாக்குகளாக உங்கள் வாக்குகள் அமைய வேண்டும். 

 

தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவரவர்களுக்கான சின்னங்களிலும் வாக்களித்து, தமிழ்நாட்டில் அமைந்துள்ள நல்லாட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வாக்காளர் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்காகவே சிந்திக்கிறோம். மக்களுக்காகவே செயல்படுகிறோம். மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தரவிடுங்கள் உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். உங்களின் ஒருவனாக, உங்கள் சகோதரனாக, கலைஞரின் மகனாக கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட ஒருவனாக செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதொரு தமிழ்நாட்டை அமைப்போம்." இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்