Skip to main content

கனிமொழியின் நூதன திட்டத்தால் நன்மை பெறும் தூத்துக்குடி மாவட்ட மக்கள்..! 

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

People of Thoothukudi district benefiting from Kanimozhi's innovative project

 

கரோனா நோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து, பொதுமக்களைத் தானே நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையும், பொதுமக்களுக்குத் தடுப்பூசி குறித்த அச்சத்தையும் போக்கி வருகிறார் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான எம்.பி. கனிமொழி. பொதுமக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது தூய்மைக் காவலர் ஒருவர், “தடுப்பூசி செலுத்தி எங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் எங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது?” என்று கேட்க, அதற்கு கனிமொழி, “நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உங்கள் குடும்பத்தை நீங்கள் காப்பாற்றலாம்” என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

 

தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒருபுறம், மறுபுறம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில், நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து நகரம் முதல் கிராமங்கள்வரை அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து, கடந்த 16/05/2021 அன்று துவக்கி வைத்திருக்கிறார் கனிமொழி. தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்பட ஊராட்சித் தலைவர்களின் பங்கும் அவசியம் என கருதிய கனிமொழி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஊராட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 403 கிராம ஊராட்சிகளில் , 1,745 குக்கிராமங்கள் உள்ளன. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 நடமாடும் தடுப்பூசி குழு என மொத்தம் 36 நடமாடும் தடுப்பூசி குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி குழு காலை 9 மணிமுதல் 12 மணிவரை ஒரு கிராமத்திலும்,  மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை ஒவ்வொரு கிராமத்திலும் என இரண்டு வேலையாக சென்று பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்திவருகிறது. தடுப்பூசிக் குழு வருகை தொடர்பாக முதல் நாளே அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் ஆட்டோ விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அந்தப் பகுதி ஊராட்சித் தலைவர்களும், அலுவலர்களும், பொதுமக்களுக்கு நேரில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் 21 நாட்களுக்குள் இந்த நடமாடும் தடுப்பூசி மையத்தை முடிக்க திட்டமிட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதால் தற்போது நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

 

கனிமொழியின் இந்த முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து, அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.