தமிழ்நாட்டில் பரவலாகப் பல மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாகத் தொடர் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் இரவு பெய்த பலத்த மழையால் முக்கியச் சாலைகள் உட்பட பல்வேறு பகுதிகளின் உட்புற சாலைகளும் வெள்ளக்காடானது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை காலை வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். மேலும், வெள்ள நீரை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

அதிகாரிகளின் நடவடிக்கையாலும், மழை சற்று ஓய்ந்ததாலும், பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீர் வடியத்துவங்கியது. ஆனால், இன்னும் இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், சென்னை, வில்லிவாக்கம், பாபா நகர் பகுதியில் அனைத்து தெருக்களும் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகரில் மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கின்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.