ADVERTISEMENT

“பொங்கல் பரிசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்” - தங்கர்பச்சான் ஆவேசம்

10:49 PM May 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

“அழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்ற இயற்கை வேளாண்மையின் அவசியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயற்கை வேளாண்மை முற்றம் அமைப்பு சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். உழவர்கள் என்ன பிச்சைக்காரர்களா? அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பொங்கல் பரிசு வழங்குகின்றனர். உழைக்கும் வர்க்கத்தை கௌரவப்படுத்த வேண்டிய அரசு, அவர்களை கேவலப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை அழிந்து வருகிறது. அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு உழவருக்கும் உள்ளது. மேலும் இதுபோன்ற இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை அரசு ஏற்று நடத்த முன்வர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். இதற்காக சண்டையும் போட்டுக் கொள்கின்றனர்.

ரசாயனத்தை கொடுத்து மண்ணை மலடாக்கி, அதன் மூலம் விளையும் பயிரை மக்களுக்கு அளித்து, உணவு உண்டு நோய்வாய்களை ஏற்படுத்த தான் இவர்கள் முயல்கின்றனர். இதன் காரணமாக ஒருபுறம் மருத்துவ படிப்புக்கான போட்டிகளும், மறுபுறம் மருந்து கடைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே ரசாயன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

வேளாண் கல்லூரிகளில் பயில்வோர் வேளாண்மையை மேம்படுத்துவதற்காக படிக்கவில்லை. போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்காகவே படிப்பதால் வேளாண் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்" என்று கூறினார்.

பின்னர் இயற்கை விவசாயம் தொடர்பான கண்காட்சியினை திறந்து வைத்து பாரம்பரிய நெல் ரகங்கள், முளைக்கட்டிய பயிர் வகைகள், கலப்படமில்லாத எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT