Skip to main content

கூலி தராத மத்திய அரசு... பொதுமக்கள் போராட்டம்!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராம புற ஊராட்சிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கிராமங்களில் உள்ள ஏழை தொழிலாளர்கள் வேலைக்கு செல்கிறார்கள்.
 

people protest against central government


இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் தாளவாடி ஒன்றியங்களில் உள்ள சுமார் 40 கிராம ஊராட்சிகளில் பணி புரிகிற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சென்ற மூன்று மாதகாலமாக சம்பளமே கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் அந்த வார சம்பளம் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுவது வழக்கம்.

சென்ற மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் ஏழைத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது சம்பந்தமாக அந்த துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசின் திட்டம் என்பதால் தங்களுக்கு நிதி வராததால் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள 15 ஊராட்சிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திங்கள்கிழமை பஸ்நிலையம் அருகே ஊர்வலமாக சென்று சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் தொகுதி முன்னாள்  எம்.எல்.ஏ. சுந்தரம், சிபிஐ சத்தி ஒன்றிய செயலாளர் நடராஜ், ஸ்டாலின் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக சத்தியமங்கலத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற சத்தியமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


இதேபோல் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் 870 பேரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். மேலும், தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரையும், ஆசனூர் அருகே அரேப்பாளையம் பகுதியில் அருள்சாமி, ஜீவபாரதி ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் மலை பகுதிகளில் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும் தொழிலதிபர்களுக்கு கோடி கோடியாய் கொடுத்து பிறகு கடனை தள்ளுபடி செய்யும் மத்திய பா.ஜ.க.மோடி அரசு, உழைத்த கூலியை கேட்கும் இந்த தொழிலாளர்களிடம் கடன்காரனனாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.