தீண்டாமைக்கு இரையான 'இறையூர்' மக்கள்; களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்

 The people of IRAYOOR  who are victims of untouchability; Clearance obtained by the District Collector

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியின்இறையூர் கிராமத்தில் உள்ளஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 30 ஆயிரம்லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.

இந்தத்தொட்டியிலிருந்து வழங்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் உள்ள மணிகண்டன் மகன் கோமித்திரன் (3), கண்ணதாசன் மகள் தீபிகாஸ்ரீ (2½), கனகராஜ் மகள் கோபிகாஸ்ரீ (6), செல்வம் மகள் பூர்வசாமிலி ஆகியோருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் கோபிகாஸ்ரீ மட்டும் இன்னும் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், குழந்தைகளின் ஒவ்வாமைக்கு குடிதண்ணீர்தான் பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், கிராமத்தினர் சிலர் இன்று காலை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். பொதுமக்களுக்கான குடிநீரில் இயற்கை உபாதை மிதந்து கொண்டிருந்தது. இந்தத்தகவல் வேகமாகப் பரவியதால் சம்பவ இடத்திற்கு வந்த விசிக நிர்வாகிகள், குடிதண்ணீரில் இயற்கை உபாதை கழித்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.

தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் வந்து ஆய்வு செய்த நிலையில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை வந்து பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்துநம்மிடம் பேசும்போது, “இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீருக்காக ஒரு தொட்டியும் மற்ற பயன்பாடுகளுக்காக ஒரு தொட்டியிலிருந்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் குடிநீர் தொட்டியில்தான் இப்படி செய்திருக்கிறார்கள். தற்போது அனைத்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருக்கிறார்கள்.

போலீசார் விரைவாக விசாரணைசெய்து குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விரைவாக குடிநீர்த்தொட்டி மற்றும் குழாய்களைச் சுத்தம் செய்து பொதுமக்களுக்குக் குடிதண்ணீர் வழங்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஊராட்சி ஒன்றியம் சார்பில் கேமரா பொருத்துவதாக உறுதியளித்துள்ளனர்” என்றார்.இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

NN

pudukottai

இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மேலும் சில கோரிக்கைகளை வைத்தனர். அந்தப் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் தங்களை சாமி கும்பிட அனுமதிப்பதில்லை.அதேபோல் டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

pudukottai

உடனடியாக அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்த மாவட்ட ஆட்சியர், அந்தப் பகுதி மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த எதிர்த்தரப்பு பெண் ஒருவர் சாமி ஆடினார். கோவிலில் இருந்து அனைவரையும் வெளியேறச் சொல்லி அந்தப் பெண் ஒருமையில் பேசினார். சாமி ஆடுவதாகக் கூச்சலிட்ட அந்தப் பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதேபோல் டீக்கடையில் ஆய்வு நடத்தி, கடை உரிமையாளர் தம்பதிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Pudukottai Untouchability
இதையும் படியுங்கள்
Subscribe