Skip to main content

கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தடை... சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

People involved in road blockade against goverment order

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ளது கடாரம் கொண்டான் என்ற கிராமம். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊரில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்கிறார்கள். ஊர் மக்கள் மற்றும் இங்குள்ள ஆண்டவர் சாமியை குலதெய்வமாக எல்லை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக சிறுக சிறுக பக்தர்களின் உதவியுடன் பணம் சேர்த்து அந்த கோயில் சாமி சிலைகளையும், கோயிலையும் புனரமைப்பு செய்தனர். இறுதியில் நேற்று அந்த கோயிலில் முறைப்படி கும்பாபிஷேக நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் கரோனா பரவலை காரணம் காட்டி காவல்துறை  கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று தடை விதித்தது.

 

ஆண்டவர் கோயிலை வழிபடும் மக்கள் தங்கள் கஷ்டப்பட்டு புனரமைப்பு செய்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் தடை உத்தரவு போடப்பட்டது கண்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் மற்றும் ஆண்டவர் சாமியின் குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் திரளாக கூடி திருச்சி -சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் கும்பாபிஷேக நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும் இல்லையேல் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தனர். இந்த நிலையில் இந்தத் தகவல் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

குறிப்பிட்ட தேதியில் ஏற்கனவே முடிவு செய்தபடி ஆண்டவர் சாமிக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று அதிகாரிகளிடம் பிடிவாதமாக கூறினர். அதன் பிறகு போலீசார் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் பக்தர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு அளித்து அவரது ஆலோசனையின்படி நடப்பதாக அதிகாரிகள் பொதுமக்கள் தரப்பில் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

கோட்டாட்சியர் அனுமதியுடன் ஆண்டவர் சாமிக்கு எப்படியும் கும்பாபிஷேகம் நடத்தி முடிப்பது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் உள்ளனர். மத்திய அரசு உத்தரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் கும்பல் கூடுவது குறையவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள், பள்ளிகல்விக்கூடங்களை மட்டும் திட்டமிட்டு மூடுவது ஏன்? தமிழக மக்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற அடிப்படை விஷயங்களில் தடைபோட்டு தடுக்கப்படுவதால் அவை அழியும் நிலையை அரசுகளே ஏற்படுத்தலாமா?என்று வேதனை தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.