“மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம்  வாக்களிக்க வேண்டும்” - மாவட்ட ஆட்சியர்

election awareness rally

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில், கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து மார்ச் 3 ஆம் தேதி உலக செவித்திறன் குறைபாடு தினத்தில், ‘மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீத வாக்களிப்போம்’ என்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.

இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன் ஆகியோர் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்கள். கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகமூரி, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், வட்டாட்சியர் ஆனந்த், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும் அவர்கள் இருசக்கர வாகனத்தில் மாணவர்களுடன் பயணித்து, மாற்றுத்திறனாளிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

பிரச்சார பேரணி, சிதம்பரம் நகரத்தின் தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி வழியாக சிதம்பரம் காந்தி சிலையை அடைந்தது. அப்போது பேசிய கடலூர் மாவட்ட ஆட்சியர், “வரும் சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்கும் வகையில், அவர்கள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்தத் தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

awareness Cuddalore elections
இதையும் படியுங்கள்
Subscribe