Skip to main content

தண்ணீரில் இறங்கி சடலம் சுமக்கும் அவலம்! பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை! 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

People demand quality bridge construction

 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சேசலூரில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை, திங்கட்கிழமை (29.11.2021) பெரியாற்றில் இறங்கி முழங்கால் அளவு தண்ணீரில் உறவினர்கள் எடுத்துச் சென்றனர். மேம்பாலம் மற்றும் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர். 

 

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமரவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சேசலூர். இங்கிருந்து பாலப்பட்டி வழியாக வடக்கு அம்மாப்பட்டி, தேக்கமலை கோயில் ஆகியவற்றுக்கு பெரியாறு வாய்க்கால் வழியைத்தான் பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர். வாய்க்கால் பகுதிக்கு முன்னதாகவே நின்றுவிட்ட தார் சாலைக்குப் பின் ஒற்றையடி பாதையாக கால்வாய்க்குச் சென்று, பின் கால்வாய் கடந்து சேறும் சகதியுமான கற்கள் நிறைந்த கரட்டு மேட்டில் ஏறிச் செல்ல வேண்டும்.

 

நடை பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவசர தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களைக் கூட பயன்படுத்த முடியாத நிலை என அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக திங்கட்கிழமை உயிரிழந்த பழனிச்சாமி மனைவி வெள்ளையம்மாளுக்கு, இறுதிச் சடங்குகள் செய்யவந்த உறவினர்களும், ஊர் மக்களும் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரில் தட்டுத்தடுமாறியே கடந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து, மயானத்திற்குச் செல்ல வெள்ளையம்மாளின் உடலை உறவினர்கள் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரிலே கடந்து சென்று, பின் ஒற்றையடி பாதையில் பயணித்து மயானத்திற்குச் சென்றனர்.

 

இதுகுறித்து அரசியல் பிரமுகர்களிடமும், ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் பலமுறை மனு அளித்தும் யாரும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இப்பகுதியில் முழுமையான சாலையும், வாய்க்கால் பகுதிக்கு மேம்பாலமும் அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.