வேலூர் மாவட்டம் ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு உடலில் சில நோய்கள் இருந்துள்ளன. இதற்கான சிகிச்சை ஆம்பூர், வேலூரில் எடுத்தும் சரியாகவில்லை. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என நவம்பர் 8ந்தேதி காலை ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

Advertisment

people demand overbridge

தனது ஊரான பெரியாங்குப்பத்தில் இருந்து ஆம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம்க்கு வர ரயில்வே தண்டவாளத்தை கடந்து வந்துள்ளார். அப்போது வேகமாக வந்த மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கீதா மீது மோதியது. அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதனால் மங்களுர் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் நின்றது. ரயில்வே போலீஸார் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த இடத்தில் மேம்பாலம் வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. அந்த கோரிக்கை இன்னமும் கிடப்பில் உள்ளது. தங்களது பகுதிக்கு செல்ல இது குறுக்கு வழி என்பதால் ரயில்வே பாதையை தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நடந்து கடப்பதால் இதுவரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் ரயில் மோதி இறந்துள்ளனர்.

Advertisment

ரயில்வே தண்டவாளத்தை கடந்து நடந்து சென்றால் வழக்கு போடுவோம் என ரயில்வே வாரிய போலீஸார் மிரட்டியும் பொதுமக்கள் அசரவில்லை. இதில் உள்ள நடைமுறை சிக்கலை உணர்ந்து ரயில்வே அதிகாரிகள் விட்டுவிடுவதால் இப்படி அடிக்கடி ரயிலில் அடிப்பட்டு இறக்கின்றனர் மக்கள்.