ADVERTISEMENT

மக்கள் கோரிக்கை!  சுற்றுச் சூழல் தினத்தில் கனிமொழியின் இரட்டை செயல் திட்டம்! 

08:06 PM Jun 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினம். அதை அர்த்தப்படுத்தும் நடவடிக்கைகளை ஜூன் 4 ஆம் தேதியே தொடங்கிவிட்டார் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆத்தூர் கஸ்பா கிராமத்துக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார் கனிமொழி. அப்போது, மக்கள் திரண்டு அவரிடம் ஒரு முக்கியமான கோரிக்கை வைத்தனர். “ஆத்தூர்ல பொதுப் பணித்துறைக்கு சொந்தமான மிகப்பெரும் பரப்புள்ள குளம் இருக்குது. இந்த குளத்தால சுத்தியுள்ள 16 கிராமங்கள் குடிதண்ணீர் பெறுகிறது. இந்த குளத்து தண்ணியால 2000 ஏக்கருக்கும் மேல விவசாயம் நடந்திருக்கு. கடலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ள இந்த ஊர் இருக்கு. அதனால நிலத்தடி நீரெல்லாம் உப்பாகுற அபாயத்துல இருக்கோம். இந்த குளத்தை ரொம்ப வருஷமா தூர் வாருவதே இல்லை. அதனால, இப்ப , இந்த குளத்தின் ஆழம் குறைஞ்சு பல செடி கொடிகள் புதர்கள் மண்டிக் கெடக்கு. இதெல்லாம் அகற்றி குளத்தை தூர்வாரினா இந்த சுத்து வட்டாரத்துல விவசாயம் செழிக்கும்; நிலத்தடி நீரும் உப்பாகாம தடுக்கலாம். இடையில இந்த குளத்துக்காக அரசாங்கம் 50 லட்சம் ஒதுக்குனதா சொன்னாங்க. ஆனா எதுவுமே நடக்கலை. அதனால, நீங்க, கவனம் எடுத்து இந்த ஆத்தூர் கஸ்பா குளத்தை தூர்வார நடவடிக்கை எடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்” என்று என கோரிக்கை வைத்தனர்.

மக்களின் கோரிக்கையும் மட்டுமல்ல; இயற்கையின் கோரிக்கையும் இது தான் என்ற காரணத்தால், அந்த கோரிக்கையை ஏற்ற கனிமொழி எம்பி, பொதுப்பணித்துறை வசம் இருக்கும் அந்த குளத்தின் விவரங்களைக் கேட்டறிந்தார். அடுத்த சில மாதங்களில் கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மக்களுக்கான கரோனா நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தியபடியே, மற்றொரு பக்கம் இந்த குளத்தை தூர்வாருவதற்கான, சுத்தப் படுத்துவதற்கான செயல் திட்டங்களையும் தயாரித்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே , 'என்வயர்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இண்டியா ' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் , இந்த குளத்தை சீரமைக்கவும், ஆழப்படுத்தவும் தாங்கள் அமைப்பு தயார் என்றும் அதற்கான வழிகாட்டுதல்களைத் தர வேண்டுமென்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தனர். இந்த சுற்றுச் சூழல் தன்னார்வத் தொண்டு அமைப்பு ஏற்கனவே சென்னை முதல் திருநெல்வேலி வரை பல நீர் நிலைகளை செம்மைப்படுத்தியுள்ளது. இந்தியா முழுதும் 15 மாநிலங்களில் 141 ஏரிகளை ஆழப்படுத்தியும் சீரமைத்தும் கொடுத்துள்ளது இந்த அமைப்பு.

கிராம சபையில் மக்கள் தன்னிடம் அளித்த கோரிக்கையை ஏற்று, கனிமொழியும் என்வர்மன்டெலிஸ்ட் ஃபவுண்டேஷன் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஆத்தூர் கஸ்பா குளத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளை இன்று (ஜூன் 4) துவக்கி வைத்திருக்கிறார்கள்.

“கிராம சபை கூட்டம் நடந்தபோது நாங்கள் வைத்த கோரிக்கைய ஞாபகம் வச்சிருந்து அந்த குளத்தை சீர்படுத்த பல முயற்சிகளை எடுத்து இன்னிக்கு வெற்றிகரமா அதை ஆரம்பிச்சிருக்காங்க கனிமொழி. இந்த குளத்தை சீரமைச்சு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை வாழ்விக்கவும், 16-க்குமேற்பட்ட கிராமங்களுக்கு நேரடி குடிநீர் பயன் பெறவும், இதையெல்லாம் விட கடலில் இருந்து ஏழு கிலோ மீட்டரே இருந்தபோதும் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பாகாமல் இருக்கவும் ஆத்தூர் கஸ்பா குளத்தை சீரமைக்கத் தொடங்கிவிட்டார் கனிமொழி” என்று குளிர்ந்து வாழ்த்துகிறார்கள் ஊர் மக்கள்.

ஜூன் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்துக்கான இந்த தினத்தின் இலக்கு, ‘சுற்றுச் சூழல் அமைப்புகளை சீரமைத்தல்’என்பதே. அதாவது நீர் நிலைகளை தூர்வாருதல், காடுகளை மீளமைத்தல் உள்ளிட்டவை.

“இயற்கை நமக்கு அளித்த சுற்றுச் சூழல் அமைப்புகளை (நீர் நிலை, காடுகள், மலைகள்) மதிக்கவும், பாதுகாக்கவும் உலக சுற்றுச் சூழல் நாளில் உறுதியெடுத்துக் கொள்வது வழக்கம். நாளை சுற்றுச் சூழல் கொண்டாடப்படும் தினத்தில் இந்த வருடத்துக்கான அதன் மைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நீர் நிலைகளை சீரமைக்கும் பணியில் ஒரு நாள் முன்பே இறங்கியிருக்கிறார் கனிமொழி என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கனிமொழியை வாழ்த்துகிறார்கள்.

உலக சுற்றுச் சூழல் தினத்துக்கான தனது செய்தியை, செயல் வடிவிலேயே நிகழ்த்தியிருக்கிறார் கனிமொழி.

இந்நிகழ்வில், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT