Skip to main content

ஊருக்கு உதவிய அதிகாரிகள்! ஒன்றுகூடி மரியாதை செய்த கிராம மக்கள்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020


 

T. Chengamedu Thasildar

 

மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வந்த குளத்தைச் சீரமைக்க உதவிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள தொ.செங்கமேடு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

 

இங்குள்ள முத்து மாரியம்மன் கோயிலை ஒட்டி சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் வற்றாத அளவில் நீர் நிறைந்திருக்கும் என்றும் அதனைச் சுத்தமாக வைத்திருக்க மீன்கள் வளர்க்கப்படும் என்றும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

 

ஆனால் இக்குளம் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. இதனையடுத்து குளத்தைச் சீரமைக்கக்கோரி திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், சமூக வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் கோயிலை நிர்வகிக்கும் 9 தர்மகர்த்தாக்கள் இணைந்து மனு அளித்தனர்.

 

வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் குளத்தைச் சீரமைக்க அனுமதி அளித்தனர். அதன்படி ஊர் மக்கள் ஒத்துழைப்போடு குளம் சீரமைக்கப்பட்டுள்ளது.

 

T. Chengamedu Thasildar

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள், 'இந்தக் குளத்தில் தண்ணீர் தேங்குவதன்மூலம் இதன் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் நீர் பெருகி ஊருக்கே குடிநீர்ப் பிரச்சினையைக் காலம் காலமாக தீர்த்து வருகிறது. வறட்சிக் காலத்திலும் கூட இந்தக் குளத்தில் நீர் நிரம்பி இருக்கும். இதன் மூலம் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் குளிர்ச்சியாகக் காணப்படும். இந்த ஊருக்கு அழகு சேர்ப்பது இந்தக் குளம். இப்போது குளம் சீரமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.

 

ஊருக்கும் மக்களுக்கும் பெரும் பயன் தருகிற இந்தக் குளத்தைப் புனரமைக்க உறுதுணையாக இருந்த வட்டாட்சியர்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஊர் மக்கள் சார்பாகக் கௌரவித்து மரியாதை செலுத்த முடிவு செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தர்மகர்த்தாக்கள் பாலமுருகன், சிகாமணி, கோவிந்தராசு, சின்னத்துரை, ஆதிமூல நயினார், ராமலிங்கம், பாலகிருஷ்ணன், காசிநாதன், ஆறுமுகம் ஆகியோர் முன் நின்றனர்.

 

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்துப் பேசிய தர்மகர்த்தாக்கள், 'கிராமத்துக்குத் தேவையான திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுக்கிறோம். அதற்கு அதிகாரிகள் மனமுவந்து ஒத்துழைப்பு அளித்து அதை நிறைவேற்றுவதற்கு அனுமதி அளிக்கிறார்கள். திட்டம் நிறைவேறிய பிறகு அதற்குக் காரணமான அதிகாரிகளை மறந்துவிடக்கூடாது. அதற்கு உதவியாக இருந்த அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் அதன் அடிப்படையிலேயே அவர்களைச் சந்தித்து மரியாதை செலுத்தினோம்' என்று கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.