Skip to main content

தொடர் கொள்ளைச் சம்பவங்களால் அதிர்ந்துள்ள கடலூர் மக்கள்! 

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

The people of Cuddalore are shocked by the series of robberies!

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகில் உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(50). விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி(43). இத்தம்பதியின் மகள் பவானி(24), திருமணமாகி மேலநிம்மேலி என்ற கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இவர், இரு தினங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர். 

 

இந்நிலையில், அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து முகத்தை துணியால் மூடிக்கொண்டு பவானியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கழட்டி தரும்படி மிரட்டியுள்ளார். ஆனால் பவானி, தன் நகையை தர மறுத்து கொள்ளையனுடன் போராடியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த அவரது தாயும், மகளை கொள்ளையனிடமிருந்து மீட்பதற்கு போராடி உள்ளார். ஆனாலும், பவானி கழுத்தில் இருந்த எட்டு பவன் தாலி செயினை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடினார். அதன்பிறகு பவானி வீட்டார் இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

அதேபோல், நெல்லிக்குப்பம் அருகில் உள்ள சித்தரசூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், மகேஸ்வரி தம்பதி. இதில் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தன் சொந்த ஊருக்கு வந்து மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி இவர்களது மூத்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி முடித்து உள்ளனர். இந்த நீராட்டு விழாவிற்கு வந்த உறவினர்கள் சீர்வரிசையாக தந்த தங்க நகைகள் பத்து சவரன், ரொக்க பணம் ஒரு லட்சம் ஆகியவற்றை வீட்டில் உள்ள அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். மீண்டும் ஊரில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது பூட்டியிருந்த மகேஸ்வரியின் வீடு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கே வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து மகேஸ்வரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை நபர்கள தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதே போல் விருத்தாசலம் அருகில் உள்ள பெரிய வடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவர், விருத்தாசலத்தில் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், விருத்தாசலம் மங்கலம்பேட்டை சாலையில் உள்ள பெரிய வடவாடி பஸ்-ஸ்டாப் அருகே தனியே வீடு கட்டி வசித்து வருகிறார்கள். கடந்த 30ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு  குடும்பத்துடன் வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்பு இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 14 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நவீன் குமார் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.  

இது போன்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களால் கடலூர் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.