Skip to main content

ஒருவழி சாலையாக மாற்றியதற்கு மக்கள் கண்டனம்!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

People condemn for turning a one way road!

 

 

ஈரோட்டில் உள்ள மேட்டூர் சாலை, சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பு  ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறை, கே.என்.வி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் மேட்டூர் ரோடு வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் சத்தி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஈரோடு நாசியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. 

 

நாச்சியப்பா வீதி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் அந்த வீதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இந்த பகுதி ஈரோடு நகரின் மையப் பகுதியாக இருக்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து பிரப் ரோடு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நாச்சியப்பா வீதிப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் கடைகள் உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். 

 

இந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள்  நடந்து செல்லவே அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சின்ன மார்க்கெட் உள்ளதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது போக்குவரத்து நெரிசலால் காய்கறிகள் வாங்கி செல்லும் பெண்கள் ஏதாவது வாகணம் மோதி விடுமா என்ற பயத்துடன் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாச்சியப்பா நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வந்தனர். எனினும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கோட்டை பகுதி  பொது மக்கள் நலச் சங்கம் சார்பில் எஸ்.பி. தங்கதுரையிடம்  நாச்சியப்பா வீதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் சரி செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் இதை கண்டித்து 16ஆம்  தேதி  ஈரோடு நாசியப்பா பகுதியில் உள்ள பல நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.