தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. அதிலும், நேற்று முன்தினம் பெய்த கன மழையால் சென்னையின் பல முக்கியச் சாலைகளும், உட்புற சாலைகளும் வெள்ளக்காடானது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அருகே இருக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சென்னை, பாடி மேம்பாலம் அருகே உள்ள சத்யா நகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டிய வசதிகளைச் செய்து வருகின்றனர். இதனையொட்டி இன்று மதியம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி முகாமில் ஆய்வு செய்ததோடு, அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.