Skip to main content

கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

People blocked the road due to rabid dog infestation

 

கரூர்-மணப்பாறை நெடுஞ்சாலையில் காணியாளம்பட்டி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

 

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி விவசாயம் நிறைந்த பகுதி. அந்தப் பகுதி மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதிகளில் தொடர்ந்து வெறிநாய்கள் ஒன்று சேர்ந்து ஆடு, மாடு, மனிதன் எனப் பார்க்காமல் கடித்து வருகின்றன. இதனால் பல கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து வெறிநாய் தொல்லை அதிகரித்து இருப்பதால் இதனை அப்புறப்படுத்த கடவூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

சிறிது சிறிதாகச் சேமித்து விவசாயம் செய்தும், அதிலிருந்து வரும் வருமானத்தில் கால்நடைகளை வாங்கி மேய்த்தும்  விவசாயிகள் வருமானம் ஈட்டி வரும் நிலையில், இன்றும் வெறிநாய் தொல்லையால் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆவேசப்பட்ட விவசாயிகள், வெறிநாய் தொல்லையால் தொடர்ந்து எங்களுடைய வாழ்வாதாரம் வீணாகி வருகிறது எனக் கூறி வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் கரூர்-மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள காணியாளம்பட்டியில் ஊர்ப்பொதுமக்களுடன் ஒன்றுகூடி மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து, கடவூர் வட்டாட்சியர் மற்றும் குளித்தலை டி.எஸ்.பி. தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடனடியாக வெறிநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் கரூர்-மணப்பாறை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்தப் பகுதி கிராம மக்கள் ஒன்றுகூடி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.