
மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் வேலை உறுதியாக வழங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வேலை நாட்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது மக்கள் குற்றம் சாட்டுகின்றன. பெரிய ஊராட்சிகளில் அதிகபட்சம் 50 நாட்களே வேலை வழங்கப்படுவதாக கூறுகின்றனர். இதனிடையே வேலை செய்த சம்பளம் பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டு தற்போது வழங்கப்படுகிறது.
இந்த சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடகாடு ஊராட்சி மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. அதனால் இந்த ஊராட்சியில் சுழற்சி முறையில் ஒரு வாரத்திற்கு ஒரு பகுதி மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ‘கடந்த சில வாரங்களாக எங்களுக்கு 100 நாள் கொடுக்கவில்லை எங்களுக்கு வேலை கொடு..’ என்று வடகாடு கிராம 100 நாள் வேலை பணியாளர்கள் சுமார் 500 பேர் ஒன்று சேர்ந்து இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, நாளை முதல் வழக்கம் போல சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு சுமார் 3 மணி நேரம் நடந்த முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.