கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று இரவு, அருகில் இருந்த வாய்க்காலில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் நீந்தி வந்த மர்மநபர் திடீரென அந்தப் பெண்ணை வாய்க்காலினுள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை தர முயற்சித்துள்ளார்.
இதைக் கண்ட அருகில் இருந்த இளைஞர்கள் வாய்க்காலில் குதித்து பெண்ணை மீட்டதுடன் மர்ம நபரை பிடித்து கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு, குற்றவாளியை தனது வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க முற்பட்டுள்ளார். அப்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மர்ம நபரை கோபமுற்ற பொதுமக்கள் இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற போலீசார் மற்றும் போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது. போலீசார் மர்ம நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர் நாமக்கல் அருகே கீழப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவக்குமார் (30) என்பது தெரியவந்தது. இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.