தமிழகத்தில் கரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தினந்தோறும் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணைக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் காணொளி மூலமாக ஆஜராகி இருந்தார்.
அப்போது தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம், “தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது, இதனை மிக தீவிர பிரச்சினையாக கருத வேண்டும். ஆனால் எந்தவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக் கவசம் அணிவதில்லை, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை” என வேதனை தெரிவித்தார்.
மேலும், “கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் தாக்கத்தைக் குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்குத் தேவையான அறிவுரை வழங்க வேண்டும். மேலும் நோய் தடுப்பிற்கு தேவையான மாற்றத்தைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். கரோனா விதிகளால் மக்கள் சோர்வடைந்துவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.