Skip to main content

சட்டவிரோத வனவிலங்கு வேட்டை; கையும் களவுமாக பிடித்த அதிகாரி

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

Penalty for illegal wildlife poaching

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள பாக்கம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் ஏராளம் உள்ளன. இந்தக் காட்டுப் பகுதிகளை வன இலாகா அதிகாரிகள், ஊழியர்கள் அவ்வப்போது வனத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆய்வு செய்ய வருவது வழக்கம். அதன்படி விழுப்புரம் சரக வன அலுவலர் பாபு வழிகாட்டுதல் படி, கண்டாச்சிபுரம் வனவர் விவேகரன் இவருடன் பாக்கம் வனக்காப்பாளர் கார்த்திகேயன், வன அலுவலர் ஆறுமுகம், அடுக்கம் வன காவலர் அருண்குமார் ஆகியோர் இணைந்து வனப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது மழவந்தாங்கல் வனப் பகுதியில் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இவர்கள் அனைவரும் வனப் பகுதியில் வேட்டையாடிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் ஐயப்பன்(36) என்பவர் காட்டுப்பன்றி ஒன்றினை வேட்டையாடி அதன் இறைச்சியை கூறு போட்டு விற்பனை செய்து வந்ததை கையும் களவுமாக பிடித்தனர்.

 

இதைத் தொடர்ந்து அவரிடம் வன அலுவலகம் நடத்திய விசாரணையின் போது, காப்புக்காடு பகுதிக்கு வந்து சட்டவிரோதமாக காட்டுப்பன்றிகளை அவ்வப்போது வேட்டையாடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சிகளை பறிமுதல் செய்ததோடு, அவருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் பறந்து விரிந்த காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாட்டுத் துப்பாக்கியுடன் வந்து வனவிலங்குகளை வேட்டையாடி செல்கின்றனர். சிலர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வழக்கு, சிறை, அபராதம் என விதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.