
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு (22.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “முருகன் மாநாடும் ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள்?. உத்தரப்பிரதேசத்தில், குஜராத்தில் நடத்த வேண்டியது தானே என்று கேட்கிறார்கள். இதன் மூலம் பிரிவினை செய்யப் பார்க்கிறார்கள். இதுபோல் சிலர் கேட்கிறார்கள்.
இன்று முருகனை நோக்கிக் கேட்கிறார்கள். நாளை சிவபெருமானைப் பார்த்துக் கேட்கலாம். அம்மனை பார்த்துக் கேட்கலாம். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது. அதைப் பற்றிச் சொல்கிறேன். இந்த சிந்தனை ரொம்ப காலமா இருந்தது. அதைப் பற்றிச் சொல்கிறேன். நான் 14வது வயதில் சபரிமலைக்குப் போனவன். தைப்பூசத்துக்குத் திருத்தணிக்குப் போவதைப் பார்த்தவன். நான் சென்னை மயிலாப்பூரில் படித்தபோது நெற்றியில் பட்டையுடன் பள்ளிக்குப் போனவன். சிறிதுகாலத்தில் மாற்றம் தெரிந்தது. அடுத்து 10ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதைக் கேள்வி கேட்டார்கள். எனவே என் 14வது வயதிலேயே இந்த விதமான கேள்விகளை எதிர்கொண்டவன். எல்லோருக்கும் இந்த எக்ஸ்பீரியன்ஸ் (அனுபவம்) இருக்கும்.
அதை நாம் பெரிதுப்படுத்தவில்லை. காரணம் இந்துக்கள் செக்குலரிஸ். கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம். ஒரு இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்குப் பிரச்சனை. ஒருவன் இந்துவாக இருந்துவிட்டால் அவன் மதவாதி. இதுதான் இவர்களது போலி செக்குலரிசம். மதத்தைக் கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதே நாகரிகத்தை நீங்கள் கடைப்பிடியுங்கள். என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதையைச் செய்யாதீர்கள். முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் அரேபியாவில் இருந்து வந்த மதங்கள் பற்றி இதே கேள்வியை நீங்கக் கேட்க முடியுமா?.
அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா?. அதனால் சொல்கிறேன். சீண்டிப் பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது. முருகன் தமிழ் கடவுள். ஆனால் அவர் எல்லா இடத்திலும் இடத்திலும் பரந்திருக்கிறார். வட இந்தியாவில் கார்த்திகேயராக, ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் சுப்பிரமணியராக, தமிழ்நாட்டில் முருகராக இருக்கிறார். முருகப்பெருமான் உலகம் முழுதும் பறந்து இருந்தாலும் அவரது பாதம் தமிழ்நாட்டில் ஊன்றி இருக்கிறது. எனவே அவரது மண்ணை வணங்குகிறேன். அதனால் தான் முருகப்பெருமானுக்கு மதுரையில் மாநாடு நடக்கிறது. அதனால் தான் இந்த மாநாட்டுக்கு நாம் எல்லாமே வந்திருக்கிறோம். இங்குச் சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை” எனப் பேசினார்.