Skip to main content

ரயிலில் நெஞ்சுவலியால் துடித்த பயணி! துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மனிதநேயம்!

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

nn


சென்னையில் இயங்கிவரும் PBTS (Pay back to the Society)  அமைப்பைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தென்னிந்திய ரயில்வேயில் Loco Pilot ஆகப் பணிபுரிகிறார். பாபா சாகேப் அம்பேத்கரோட மேற்கோள்தான் - Pay back to the Society. அந்த அமைப்பின் கீழ் செயல்படுபவர்கள், நமது நாட்டில் நமக்கு என்னென்ன கிடைத்ததோ, என்னென்ன பலன்களை நாம் அனுபவித்து வருகிறோமோ, அதையெல்லாம் எதிர்வரும் தலைமுறையினருக்கு திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என பொதுச்சேவையிலும் தங்களை ஈடுபடுத்திவருகிறார்கள்.  

 

ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ‘அனுபவம்’ ஒன்றை கருப்பசாமி நம்மிடம் பகிர்ந்தார். “நேற்று (5ம் தேதி) காலை 7 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி செந்தூர் விரைவு ரயிலைக் கிளப்பினேன். என்னுடன் உதவிஓட்டுநராக தம்பி முகில்வேந்தனும், ரயில் காப்பாளராக சுகேந்திரனும் பணிபுரிந்தனர். ரயில் விழுப்புரத்திலிருந்து வேகமெடுத்து,  விழுப்புரத்தை அடுத்துள்ள நிலையமான முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தை 110 கி.மீ வேகத்தில் கடந்தபோது, திடீரென்று வேகம் குறைந்தது. ரயிலில் ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்த நான், ரயிலை  நிறுத்தி ரயில் காப்பாளரைத் தொடர்பு கொண்டேன். 

 

nn

 

காப்பாளர் சுகேந்திரன் என்னிடம் ‘முன்பதிவில்லாப் பெட்டியில் பயணிக்கும் அந்தப் பயணிக்கு வயது 45 இருக்கும். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால் அலாரம் செயினை (ACP - Alarm Chain Pulling) இழுத்திருக்கிறார்.’ என்றார். மேலும் சுகேந்திரன்,  நிலைய அதிகாரியைத் தொடர்புகொண்டு, பயணியின் நிலைமையை விளக்கி, ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினார். நிலைய அதிகாரி இந்தி பேசும் வடநாட்டவராக இருந்ததால், சுகேந்திரன் கூறியதை புரிந்துகொள்ளவோ, அவசர நிலையை உள்வாங்கவோ முடியாதவராக இருந்தார்.   

 

என்னுடன் இருந்த  உதவி ஓட்டுநர் முகில்வேந்தனுக்கு  இந்தி தெரியும். அவரை நிலைய அதிகாரியோடு பேசவைத்து, விபரங்களைக் கூறி ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு பண்ணச் செய்தோம். இதற்கிடையில், ரயிலில் பயணித்த பயணிகளில் ஒருவர் மருத்துவராக இருந்தார். அவர் மூலம் தக்க நேரத்தில், அந்தப் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடிந்தது. ஆம்புலன்ஸும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த நபர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகே, ரயிலை சென்னைக்கு கிளப்பினோம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ரயில் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்ற, இங்கே அவரவரும் அவரவருக்கு ஏற்றவகையில் உதவி செய்தது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது.” என்றார்.  அந்த ரயிலில் நல்ல மனங்கள் ஒரே இடத்தில் சங்கமித்ததால், ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சியில், அவர்களால் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.